46. மண்ணளந்த மணிவண்ணர் - பாடல் 9
சினம் பொங்கி படம் எடுத்தாடும் பாம்பினை
பொங்காடரவு ஒன்று கையில் கொண்டு போர் வெண் மழு
ஏந்திப் போகா நிற்பர்
தங்கார் ஒரு விடத்தும் தம் மேல் ஆர்வம் தவிர்த்து
அருளார் தத்துவத்தே நின்றேன் என்பார்
எங்கே இவர் செய்கை ஒன்றொன்று ஒவ்வா என் கண்ணின்
நின்றகலா வேடம் காட்டி
மங்குல் மதி தவழும் மாட வீதி வலம்புரமே புக்கு அங்கே
மன்னினாரே
விளக்கம்
பொங்கு = சினம் பொங்கும். ஒன்றுடன் ஒன்று ஒவ்வாத செயல்களை புரிபவராக பெருமானை அப்பர் நாயகி கருதும் எண்ண அலைகள் இந்த பாடலில் வெளிப்படுகின்றன. எந்த ஒரு இடத்திலும் தங்குவதை தவிர்க்கும் பெருமான், அந்தந்த தலங்களில் உள்ள பெண்மணிகள் தம் மீது ஆர்வம் கொள்வதையும் தவிர்க்க வேண்டும் அல்லவா, ஆனால் அவ்வாறு செய்யமால் தனது மேனி அழகினால் அனைவரும் தம் மீது விருப்பம் கொள்ளுமாறு செய்கின்றார். தான் மெய்ப்பொருளின் வடிவமாக இருப்பதாக சொல்லிக்கொண்டு, எனது கண்களிலிருந்து அகலாதவாறு அழகான வேடத்துடன் காட்சி அளிக்கின்றார். இந்த செய்கையும் அவரது சொல்லுக்கும் செயலுக்கும் ஒவ்வாத செய்கை.
Advertisement
பொழிப்புரை
சினம் பொங்கி படம் எடுத்தாடும் பாம்பினைத் தனது கையினில் பற்றிக்கொண்டும், மற்றோர் கையினில் மழு ஆயுதத்தை ஏந்திக்கொண்டும் நிற்கும் பெருமான், புறப்பட்டு எங்கோ செல்வது போன்று போக்கு காட்டி, என்னை பார்த்தவாறு நின்றார். அவ்வாறு சிறிது நேரம் இருந்த பெருமான், எந்த ஒரு தலத்திலும் பொருந்தி தங்காதவர் போன்று பல இடங்களுக்கு செல்வராக இருப்பினும், தம்மிடத்தில் பெண்கள் கொள்ளும் ஆர்வத்தை தடுக்காது இருக்கின்றார். ஏன் அவ்வாறு இருக்கின்றீர் என்று கேட்டபோது, தான் மெய்ப்பொருளாக இருப்பதாக கூறிய இவரின் சொற்களும் செயல்களும் ஒன்றுக்கொன்று ஒவ்வாத நிலையில் உள்ளன. தனது அழகான வேடத்தினால், எனது உள்ளத்தைக் கவர்ந்து கொண்ட இவரது திருமேனியின் அழகு எனது கண்களை விட்டு அகலாது நிற்கின்றது. இவ்வாறு தனது அழகிய வேடத்தைக் காட்டி என்னை மயக்கிய இவர், வானத்தில் உலவும் சந்திரன் தவழும் அளவுக்கு உயர்ந்து காணப்படும் மாடங்கள் நிறைந்த வலம்புரத்து தலத்தில் நீங்காது உறைகின்றார்.