42. ஆதியில் பிரமனார் - பாடல் 10
சிவபிரான் கால் விரலால் மலையினை அழுத்த
எடுத்தனன் எழில் கயிலை இலங்கையர் மன்னன் தன்னை
அடுத்து ஒரு விரலால் ஊன்ற அலறிப் போய் அவனும் வீழ்ந்து
விடுத்தனன் கைந்நரம்பால் வேத கீதங்கள் பாடக்
கொடுத்தனர் கொற்ற வாள் நாள் குறுக்கை வீரட்டனாரே
விளக்கம்
கொற்ற = வெற்றியைத் தரும்.
Advertisement
பொழிப்புரை
எழில் மிகுந்த கயிலாய மலையினை எடுக்க இலங்கை மன்னன் ராவணன் முயற்சி செய்ததை அடுத்து, சிவபிரான் தனது கால் விரலால் மலையினை அழுத்த, ராவணன் செயலற்று அலறி வீழ்ந்தான். தனது செருக்கினை கைவிட்ட ராவணன், தனது கை நரம்பையே வீணையின் நரம்புகளாக மாற்றி, சாமவேத கீதங்கள் பாடினான்; அவனது பாடலால் மகிழ்ந்த குறுக்கை வீரட்டனார், அவனுக்கு வெற்றியைத் தரும் வாளினையும், நீண்ட வாழ்நாளையும் கொடுத்து அருள் புரிந்தார்.
இந்த பதிகத்தில் சண்டீசர், கோச்செங்கட்சோழன், சாக்கியர், கண்ணப்பர், கணம்புல்லர் என்று ஐந்து நாயன்மார்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் சற்று விரிவாக கூறப்பட்டுள்ளன. சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகை பதிகத்திற்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமான நாயன்மார்களை குறிப்பிடும் தேவாரப் பதிகம் இதுதான்.
ஒன்பதாம் திருமுறையில் உள்ள, முத்து வயிரமணி என்று தொடங்கும் பதிகத்தில், பூந்துருத்தி காடநம்பி, கணம்புல்லர், கண்ணப்பர், நாவுக்கரசர், ஞானசம்பந்தர், சேரமான் பெருமாள், சுந்தரர், தில்லை மூவாயிரவர் ஆகிய நாயன்மார்களை குறிப்பிடுகின்றார். பதினோராம் திருமுறையில் உள்ள திருத்தொண்டர் திருவந்தாதி (நம்பியாண்டார் நம்பி அருளியது) சுந்தரர் அருளிய திருத்தொண்டத்தொகையை முதல்நூலாகக் கொண்ட வழிநூலாகும். பெரியபுராணம் இந்த இரண்டு நூல்களையும் பின்பற்றிய விரிநூல்.