முகப்பு
தினம் ஒரு தேவாரம்

43. கொடுங்கண் வெண்தலை - பாடல் 5

சுனையில் மலர்ந்த நீல மலர்கள் வெட்கி

Updated On : 11 நவம்பர், 2016 at 5:25 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:09 AM

சுனையுள் நீலம் சுளியும் நெடும் கணாள்
இனையன் என்று என்றும் ஏசுவது என் கொலோ
நினையும் தண்வயல் சூழ் திரு நின்றியூர்ப்
பனையின் ஈருரி போர்த்த பரமரே

விளக்கம்

இந்த பாடல் அப்பர் நாயகியின் தாயின் கூற்றாக, அகத்துறை முறையில் அமைந்த பாடல். சுளியும் = நெளியும், அப்பர் நாயகியின் நீண்ட கண்களின் அழகின் முன்னே தான் தோற்றதால் வருத்தத்தால் உடல் நெளியும் நீல மலர். இனையன் = காதலித்தவரை கைவிட்டவன்; பனை = பனை மரம் போன்று பருத்த துதிக்கையை உடைய யானை.

Advertisement

பொழிப்புரை

சுனையில் மலர்ந்த நீல மலர்கள் வெட்கி தலை சாயும் வண்ணம் அழகான நீண்ட கண்களைக் கொண்ட எனது மகள், தனது காதலை ஏற்காமல் கைவிட்டவன் என்று உன்னை ஏப்போதும் ஏசிக்கொண்டு இருக்கின்றாள். என்ன காரணம் என்று எனக்கு புரியவில்லையே. நினைப்போரின் உள்ளங்களைக் குளிரவைக்கும், குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருநின்றியூர் தலத்தில் உறைபவனும், பனை மரத்தின் தண்டு போன்று பருத்தும் வலிமையாகவும் காணப்படும் துதிக்கையினை உடைய யானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்தவனும் ஆகிய இறைவனே, நீதான் எனக்கு பதில் கூற வேண்டும். மேலும் எனது மகள் இனியும் உன்னை ஏசாதவாறு நீ செயல் புரிய வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.