முகப்பு
தினம் ஒரு தேவாரம்

43. கொடுங்கண் வெண்தலை - பாடல்  6

உமது தலையின் உச்சியில் உள்ளவன்

Updated On : 11 நவம்பர், 2016 at 5:25 PM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:11 AM

உரைப்பக் கேண்மின் நும் உச்சி உளான் தனை
நிரைப் பொன் மாமதில் சூழ் திரு நின்றியூர்
உரைப் பொன் கற்றையார் இவரோ எனில்
திரைத்துப் பாடித் திருதரும் செல்வரே

விளக்கம்

உரைப்பொன் = பொன்னின் தரத்தினை ஒப்பிட்டு பார்ப்பதற்காக பொற்கொல்லர்கள் பயன்படுத்தும் பொன்; திரைத்து = அலைத்து; நிரைப் பொன் = வரிசையாக அழகுடன் அமைந்த; ஒரு வகையில் பார்த்தால், சென்ற பாடலில் வெளிப்பட்ட தாயின் கூற்றுக்கு பதில் கூறும் முகமாக மகள் கூறுவதைப் போன்று இந்த பாடல் அமைந்துள்ளது. தான் பெருமானை ஏசுவதன் காரணம், பாடியவாறு பல இடங்களிலும் திரியும் பெருமான், என்னை அலைக்கழித்து, எனது துன்பத்தினை பெருக்குவது தான் என்பதை உணர்த்துவதாக அமைந்த பாடல் எவரிடமும் இல்லாத முக்திச் செல்வத்தை, என்றும் அழியாமல் நிலையாமல் நிற்கும் முக்திச் செல்வத்தை உடையவரை செல்வர் என்று மிகவும் பொருத்தமாக பல திருமுறை பாடல்கள் அழைக்கின்றன. இவ்வாறு செல்வராக இருக்கும் பெருமான், பலி ஏற்க பல இடங்களுக்கும் செல்வது ஏன் என்ற கேள்வி அப்பர் நாயகிக்கு எழுந்தது போலும். செல்வர் என்று குறிப்பிட்டு, செல்வராக உள்ள பெருமான், பல இடங்களுக்கும் சென்று பலி ஏற்பது, தான் அவரைப் பின் தொடரா வண்ணம் தடுப்பதற்காகவே என்று தனது எண்ணத்தினை உணர்த்தும் பொருட்டு, செல்வர் என்று அப்பர் நாயகி அழைக்கும் நயத்தை நாம் உணரலாம்.

Advertisement

பொழிப்புரை

உமது தலையின் உச்சியில் உள்ளவன், யார் என்று கேட்கின்றீர்கள். நான் சொல்கின்றேன். நீங்கள் கேட்பீராக; வரிசையாகவும் அழகாகவும் அமைந்த மதில் சுவர்களை கொண்ட திருநின்றியூர் தலத்தில் உறைபவரும், பொன் மயமான கற்றைச் சடையை உடையவரும் ஆகிய பெருமான் ஆவார். அவர்தான் அனைத்து இடங்களிலும் திரிந்தவாறு நம்மை அலைக்கழிக்கும் செல்வர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.