முகப்பு
தினம் ஒரு தேவாரம்

44. முற்றுணை ஆயினானை - பாடல் 3

புன்னை மரம், செழித்து வளர்ந்துள்ள

Updated On : 25 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:11 AM

எண்பதும் பத்தும் ஆறும் என்னுளே இருந்தி மன்னிக்
கண்பழக்கு ஒன்றுமின்றிக் கலக்க நான் அலக்கழிந்தேன்
செண்பகம் திகழும் புன்னை செழுந்திரள் குரவம் வேங்கை
நண்புசெய் சோலை சூழ்ந்த நனிபள்ளி அடிகளாரே    

விளக்கம்

கண்பழக்கம் = இரக்கம். மன்னி = நிலையாக இருத்தல். நாம் அடிக்கடி காணும் ஒருவர் பேரில் இரக்கம் வருவது உலக இயற்கை. ஆனால் உடலுடனே, உயிருடனே எப்போதும் பொருந்தி இருக்கும் தத்துவ தாத்துவீக கூட்டங்களுக்கு அத்தகைய இரக்கம் இல்லை என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார். மரங்கள் ஒன்றுக்கொன்று நெருக்கமாக இருக்கும் நிலையினை மரங்கள் நண்பு செய் சோலை என்று கூறுகின்றார்.

Advertisement

பொழிப்புரை

செண்பகம், ஓங்கி வளர்ந்து காணப்படும் புன்னை மரம், செழித்து வளர்ந்துள்ள குரவம் மற்றும் வேங்கை மரம் ஆகியவை கலந்து ஒன்றுக்கொன்று நெருங்கி காணப்படும் சோலைகள் சூழ்ந்த நனிபள்ளி தலத்தில் உறையும் பெருமானே, எனது உடலுடன் நெருக்கமாக இருக்கும் 96 தத்துவ தாத்துவீகக் கூட்டங்கள், சிறிதும் எனது உயிரின் மேல் இரக்கம் கொள்ளாமல், தங்கள் போக்கிலே நடந்துகொள்வதால் நான் மிகவும் கலக்கம் அடைந்து வருந்துகின்றேன். இறைவனே நீ தான் எனது கலக்கத்தையும் வருத்தத்தையும் நீக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.