44. முற்றுணை ஆயினானை - பாடல் 4
பழத்தினில் காணப்படும் சுவையான ரசம்
பண்ணினார் பாடலாகிப் பழத்தினில் இரதமாகிக்
கண்ணினார் பார்வையாகிக் கருத்தொடு கற்பமாகி
எண்ணினார் எண்ணமாகி ஏழுலகு அனைத்துமாகி
நண்ணினார் வினைகள் தீர்ப்பார் நனிபள்ளி அடிகளாரே
விளக்கம்
இரதம் = பழரசம். இறைவன் அனைத்து உயிர்களுடனும் கலந்திருக்கும் நிலை இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது. இறைவன் உயிர்களுடன் கலந்து இருப்பது பார்வைக்கு புலப்படாது. ஆனால் நாம் அதனை உணர முடியும் என்பதை அப்பர் பிரான் சுட்டிக் காட்டுகின்றார்.
Advertisement
பொழிப்புரை
பண்ணோடு பொருந்தும் பாடல் போலவும், பழத்தினில் காணப்படும் சுவையான ரசம் போலவும், கண்ணினோடு இணைந்த பார்வை போலவும், மனத்தினால் உணரப்படும் கற்பனை போலவும், அறிவினால் உணரப்படும் எண்ணங்கள் போலவும், அனைத்து உயிர்களுடன் கலந்து நிற்கும் இறைவன் ஏழ் உலகங்களாகவும் இருக்கின்றான். அவனை மனதினில் நினைத்து வழிபடும் அடியார்களின் வினைகளைத் தீர்க்கின்றான். அந்த இறைவன்தான் நனிபள்ளி தலத்தில் உறைகின்றான்.