முகப்பு
தினம் ஒரு தேவாரம்

44. முற்றுணை ஆயினானை - பாடல் 5

சேக்கிழார், மருள் நீக்கியார் என்று சிறுவயதில்

Updated On : 27 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:11 AM

   துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்திராதே
    அஞ்செழுத்து ஓதி நாளும் அரனடிக்கு அன்பதாகும்
    வஞ்சனைப் பால் சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த
    நஞ்சமுது ஆக்குவித்தார் நனிபள்ளி அடிகளாரே


விளக்கம்

வழக்கிலா அமணர் = நல்ல வழக்கங்கள் பழக்கத்தில் கொள்ளாத சமணர்கள். கொல்லாமை என்பது சமண சமயத்தின் முக்கியமான கொள்கையாகும். ஆனால் அப்பர் காலத்தில் காஞ்சி நகரில் வாழ்ந்து வந்த சமணர்கள், தங்களது முக்கியமான கொள்கையாகிய கொல்லாமையை, பின்பற்றாது கைவிட்டவர்களாக இருந்ததை நாம் அப்பர் பெருமானின் சரித்திரத்திலிருந்து உணருகின்றோம். மேலும் வஞ்சனையாக பால் சோறு ஆக்கியவர்கள் என்ற பின்னணியில் பார்க்கும்போது, கொல்லாமை கொள்கையினை வழக்கத்தில் கொள்ளாத அமணர்கள் என்று பொருள் கொள்வது மிகவும் பொருத்தமாக உள்ளது.

சேக்கிழார், மருள் நீக்கியார் என்று சிறுவயதில் அழைக்கப்பட்ட அப்பர் பிரான், சமணசமயம் சார்ந்ததன் பின்னணியை குறிப்பிடும்போது, சமண சமயத்தை கொல்லாமை மறைந்து உறையும் சமயம் என்று கூறப்பட்டது இங்கே நினைவு கொள்ளத் தக்கது. தங்களது சமயத்தினை வளர்ப்பதற்காக, தங்களது சமயக் கொள்கையையும் கைவிட்டு அவர்கள் வாழ்ந்த அவல வாழ்க்கை நமக்கு இதிலிருந்து புலனாகின்றது.

    நில்லாத உலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை
    அல்லேன் என்று அறத் துறந்து சமயங்கள் ஆனவற்றின்
    நல்லாறு தெரிந்து உணர நம்பர் அருளாமையின்
    கொல்லாமை மறைந்து உறையும் அமண் சமயம் குறுகினார்

துஞ்சிருள் = இருள் நீங்கும் காலை நேரம். தொடர்ச்சி = எந்த பிறவி எடுத்தாலும், எத்தனை பிறவி எடுத்தாலும், உயிர்க்கும் இறைவனுக்கும் இடையே உள்ள உறவு மாறுவதில்லை. மேலும் உயிரின் விருப்பமும் என்றும் மாறாமல், இறைவனைச் சென்று சார வேண்டும் என்பதாகவே இருக்கின்றனது. இந்த தொடர்ச்சியை நாம் எப்போதும் மறவாமல், இறைவனை நினைத்து வழிபட வேண்டும் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.

பொழிப்புரை

நமக்கும் இறைவனுக்கும் இடையே உள்ள தொடர்ச்சியான உறவினை மறக்காமல், தினமும் காலையிலும் மாலையிலும், பஞ்சாக்கர திருமந்திரத்தை ஓதி சிவபெருமானை வழிபாட்டு வந்தால், பெருமானின் திருவடிகள் பால் நாம் வைத்துள்ள அன்பு பெருகும். நாம் சிவபெருமானின் மீது வைத்துள்ள அன்பு பெருகினால், அவர் நம் மீது செலுத்தும் அன்பும் அதிகமாகும். இவ்வாறு அடியேன் பெருமானின் மீது அன்பு செலுத்தியதால், வஞ்சனையாக பால் சோற்றினில் நஞ்சினைக் கலந்து சமணர்கள் எனக்கு ஊட்டியபோது, அந்த நஞ்சினை அமுதமாக சிவபெருமான் மாற்றினார். இவ்வாறு அருள் புரிந்து, எனக்குத் துணையாக இருந்த நற்றுணையப்பர், நனிபள்ளி தலத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.