முகப்பு
தினம் ஒரு தேவாரம்

44. முற்றுணை ஆயினானை - பாடல் 6

சிவபெருமானின் திருமுடியைக் காண

Updated On : 28 நவம்பர், 2016 at 12:00 AM
பகிர்:
Updated On : 25 ஜனவரி, 2024 at 12:17 AM

செம்மலர் கமலத்தோனும் திருமுடி காண மாட்டான்
அம்மலர் பாதம் காண்பான் ஆழியான் அகழ்ந்தும் காணான்
நின்மலன் என்று அங்கு ஏத்து நினைப்பினை அருளி நாளும்
நம் மலம் அறுப்பர் போலும் நனிபள்ளி அடிகளாரே

விளக்கம்

அகழ்தல் = நிலத்தைத் தோண்டிச் செல்லுதல். நின்மலன் = மலங்கள் அணுகமுடியாத தன்மையை உடையவன். சிவபெருமான் இயல்பாகவே மலங்களை களைந்தவன். ஆணவம், கன்மம், மாயை எனப்படும் மலங்களில் கட்டுண்டு கிடக்கும் நாம், அந்த மலங்களின் பிடியிலிருந்து விடுபட்டால்தான், இறைவனைச் சென்று அடைய முடியும். மலங்களால் அணுக முடியாத ஒருவன் தானே, மலங்களைக் களைய நமக்கு உதவ முடியும். எனவே தான் நின்மலன் என்று சிவபிரானை குறிப்பிட்டு, அவனை வணங்கினால் நாம் பயன் அடைய முடியும் என்பதை அப்பர் பிரான் இங்கே நமக்கு உணர்த்துகின்றார்.

Advertisement

பொழிப்புரை    

செம்மை நிறம் வாய்ந்த தாமரை மலர் மீது உறையும் பிரமனால், சிவபெருமானின் திருமுடியைக் காண இயலவில்லை. சிவபெருமானது மலர்ப் பாதங்களை காண்பதற்காக, சக்கரத்தை கையில் ஏந்திய திருமால், பன்றி வடிவம் எடுத்து நிலத்தைக் கீறிக்கொண்டு பாதாளம் வரை சென்றும், காணமுடியவில்லை. சிவபெருமான், இயல்பாகவே மலங்களைக் களைந்தவன் என்ற நினைப்பினை நமது மனதினில் ஏற்படுத்தி, அந்த நினைவால் தன்னைத் தொழச் செய்து, நம்மை மலங்களின் பிடியிலிருந்து விடுவிக்கும் திறமை வாய்ந்தவர், அவர் தான் நனிபள்ளி தலத்தில் உறையும் பெருமான் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.