39. வெள்ளெருக்கு அரவம் - பாடல் 2
றைவனை மனதினில் நினையாதவர் நரகக் குழியில்
பாடல் 2
மாற்றம் ஒன்று அறியீர் மனை வாழ்க்கை போய்க்
கூற்றம் வந்து உமைக் கொள்வதன் முன்னமே
போற்ற வல்லீரேல் புள்ளிருக்குவேளூர்
சீற்றம் ஆயின தேய்ந்து அறும் காண்மினே
விளக்கம்
புள்ளிருக்குவேளூர் தலத்து இறைவனை மனதினில் நினையாதவர் நரகக் குழியில் வீழ்வார்கள் என்று பதிகத்தின் முதல் பாடலில் கூறிய அப்பர் பிரான், நம்மை வருத்தவரும் கூற்றுவனின் சீற்றம் குறைந்து முற்றிலும் அழிவதற்கான வழியை இந்த பாடலில் சொல்லிக் கொடுக்கின்றார். மாற்றம் = மறுமொழி.
Advertisement
பொழிப்புரை
உங்களது உலக வாழ்க்கை முடியும் சமயத்தில், கூற்றுவன் உங்களது உயிரினை வருத்துவதற்காக பறித்துச் செல்ல வரும்போது அவனுக்கு என்ன மறுமொழி கூறுவது என்று தெரியாமல் இருக்கும் மனிதர்களே, உங்கள் அருகில் வந்து கூற்றுவன் உமைக் கொல்வதன் முன்னர், நீங்கள் புள்ளிருக்குவேளூர் இறைவனை போற்றும் வல்லமை உடையவர்களாக இருந்தால், கூற்றுவனுக்கு உங்கள் மீது உள்ள சீற்றம் படிப்படியாக குறைந்து தேய்ந்து அறுந்துவிடும் என்பதை உணர்ந்து செயல்படுவீர்களாக. இவ்வாறு இறைவனை வழிபட்டு, கூற்றுவனுக்கு மறுமொழி சொல்ல வேண்டிய அவசியத்தை தவிர்ப்பீர்களாக.