முகப்பு
தினம் ஒரு தேவாரம்

37. சொல்லானைப் பொருளானை  - பாடல் 1

அதிசயக் குழந்தையாகிய திருஞான சம்பந்தரை

Updated On : 22 செப்டம்பர், 2016 at 5:48 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:45 PM

(நாரையூர் – திருத்தாண்டகம்)

முன்னுரை

மூன்று வயதிலிருந்து தேவாரப் பதிகங்கள் பாடும் அதிசயக் குழந்தையாகிய திருஞான சம்பந்தரைக் காண்பதற்காக தில்லையிலிருந்து புறப்பட்ட அப்பர் பிரான், திருநாரையூர் வழியாக சீர்காழி செல்கின்றார். அவ்வாறு திருநாரையூர் சென்றபோது, அங்கே இரண்டு பதிகங்கள் அருளினார். ஒன்று, வீறு தானுடை வெற்பன் என்று தொடங்கும் நேரிசைப் பதிகம் (5.55), இரண்டாவது சொல்லானைப் பொருளானை என்று தொடங்கும் திருத் தாண்டகம் (6.74). முதல் பதிகத்தில் தலத்து இறைவனின் திருக்கோலத்தை பலவாறும் சிறப்பித்து, அவனது வியப்பூட்டும் அழகினை விவரித்த அப்பர் பிரான், இரண்டாவது பதிகத்தில், அவனது பண்புகளை, வீரச் செயல்களை குறிப்பிட்டு அத்தகைய இறைவனை, நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே என்று பதிகத்தின் ஒவ்வொரு பாடலினையும் முடிக்கின்றார்.

Advertisement

பாடல் 1

சொல்லானைப் பொருளானை சுருதியானைச் சுடராழி நெடுமாலுக்கு அருள் செய்தானை
அல்லானைப் பகலானை அரியான் தன்னை அடியார்கட்கு எளியானை அரண் மூன்று எய்த
வில்லானைச் சரம் விசயற்கு அருள் செய்தானை வெங்கதிரோன் மாமுனிவர் விரும்பி ஏத்தும்
நல்லானைத் தீயாடு நம்பன் தன்னை நாரையூர் நன்னகரில் கண்டேன் நானே


விளக்கம்

சுருதி = வேதங்கள். அல் = இரவு. தன்னிடம் அன்பு இல்லாதார்க்கு அரியானாகவும், தன்னிடம் அன்பு கொண்ட அடியார்களுக்கு எளியவனாகவும் விளங்கும் பெருமான் என்று இங்கே குறிப்பிடும் அப்பர் பிரான், இறைவனின் அத்தகைய தன்மைகளுக்கு இந்த பாடலில் உதாரணம் அளிப்பதையும் நாம் உணரலாம். சிவபெருமானை நிந்தனை செய்து வாழ்ந்த திரிபுரத்து அரக்கர்களை அழித்ததும், பெருமானிடத்தில் பக்தி கொண்டு தவம் செய்த அர்ஜுனனுக்கு பாசுபத அத்திரம் அளித்ததும், பெருமானின் பண்பினை விளக்க அப்பர் பிரான் உணர்த்தும் செயல்கள்.

பொழிப்புரை

சொல்லாகவும் பொருளாகவும் பொருள் நிறைந்த சொற்களைக் கொண்ட வேதங்களாகவும் உள்ள சிவபெருமான், ஒளி மிகுந்த சக்கரப்படையை திருமாலுக்கு அருள் செய்தவர். இரவாகவும் பகலாகவும் இருக்கும் பெருமான், தன்னிடம் அன்பு இல்லாதவர்களுக்கு அரியவனாகவும், தன்னிடம் அன்பு கொண்ட அடியார்களுக்கு மிகவும் எளியனாகவும் உள்ளான். தன்னிடம் அன்பு கொள்ளாத திரிபுரத்து அரக்கர்களின் பறக்கும் கோட்டைகள் மூன்றினையும் அழித்தவர் சிவபெருமான். தன்னிடம் அன்பு கொண்டு தவம் செய்த அர்ஜுனனுக்கு பாசுபதம் அருளியவர் சிவபெருமான். சூரியன் மற்றும் முனிவர்கள் சிவபெருமானை, விருப்பத்துடன் மிகவும் மகிழ்ந்து வணங்குகின்றார்கள். இவ்வாறு எல்லார்க்கும் நல்லவனாகவும், அனைவரும் நம்பிக்கையுடன் விரும்பும் வண்ணம் பண்புகளை உடையவனாகவும், விளங்கும் பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.