37. சொல்லானைப் பொருளானை - பாடல் 2
அமுதம் அருந்த வழி வகுத்தவன் சிவபெருமான்.
பாடல் 2
பஞ்சுண்ட மெல்லடியாள் பங்கன் தன்னைப் பாரொடு நீர் சுடர் படர்
காற்று ஆயினானை
மஞ்சுண்ட வானாகி வானம் தன்னில் மதியாகி மதி சடைமேல்
வைத்தான் தன்னை
நெஞ்சுண்டு என் நினைவாகி நின்றான் தன்னை நெடுங்கடலைக்
கடைந்தவர் போய் நீங்க ஓங்கும்
நஞ்சுண்டு தேவர்களுக்கு அமுது ஈந்தானை நாரையூர் நன்னகரில்
கண்டேன் நானே
விளக்கம்
பஞ்சுண்ட மெல்லடி = செம்பஞ்சுக் குழம்பு ஊட்டப்பட்ட மென்மையான பாதங்கள். ஐந்து பூதங்களையும் சந்திரனையும் குறிப்பிடுவதால், அவற்றுடன் ஒரு தொகுப்பாக
Advertisement
விளங்கும் சூரியன் மற்றும் ஆன்மாவினையும் குறிப்பிட்டு, அட்ட மூர்த்தியாக இறைவன் உள்ள நிலையினை குறிப்பதாக பொருள் கொள்ள வேண்டும்.
பொழிப்புரை
செம்பஞ்சுக் குழம்பு தீட்டப்பட்ட மென்மையான பாதங்களை உடைய உமையம்மைக்குத் தனது உடலின் ஒரு பங்கினை அளித்தவன் சிவபெருமான். உலகம், நீர். தீ, எங்கும்
படர்ந்து நிறைந்திருக்கும் காற்று மற்றும் மேகங்கள் தவழும் ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்களாகவும், சூரியன் சந்திரன் மற்றும் ஆன்மாவாக இருக்கும் அட்ட மூர்த்தி
சிவபெருமான்; சந்திரன்பால் வைத்த கருணையால், அவன் அழியாமல் காக்கும் பொருட்டுத் தனது தலையில் சந்திரனை சூடிக்கொண்டவன் சிவபெருமான். எனது
நெஞ்சினை ஒரு நிலைப்படுத்தி அதன் அனைத்து நினைவுகளுமாக இருப்பவனும் சிவபெருமான்தான். நெடுங்கடலாகிய பாற்கடலைக் கடைந்த தேவர்கள், அந்த கடலிலிருந்து
திரண்டு எழுந்த நஞ்சினுக்கு அஞ்சி, அந்த இடத்தைவிட்டு ஓடத் தலைப்பட்டபோது, அவர்களது அச்சம் தீர்க்கும் வகையில் அந்த நஞ்சினை உண்டு, பின்னர் அவர்கள்
அமுதம் அருந்த வழி வகுத்தவன் சிவபெருமான். இத்தகைய பண்புகளை உடைய பெருமானை நாரையூர் நன்னகரத்தில் நான் கண்டேன்.