முகப்பு
தினம் ஒரு தேவாரம்

38.  மாது இயன்று மனைக்கு - பாடல் 3

பிறைச் சந்திரனைத் தனது தலையில் அணிந்த

Updated On : 23 செப்டம்பர், 2016 at 3:44 PM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 11:50 PM


பாடல் 3

    கெண்டை போல் நயனத்து இமவான் மகள்
    வண்டு வார் குழலாள் உடனாகவே
    துண்ட வான்பிறைத் தோணிபுரவரைக்
    கண்டு காமுறுகின்றனள் கன்னியே

விளக்கம்

Advertisement

தோணிபுரத்து இறைவரின் தகுதிக்கு உரிய செயல் அல்ல என்று முந்தைய பாடலில் கூறிய தாய் சிவபிரானது தகுதி என்ன என்பதை நினைக்கின்றாள். அவர் இமவான் மகளை மணந்ததும் அல்லாமல், பார்வதி தேவிக்குத் தனது உடலின் ஒரு பாகத்தை அளித்து தான் செல்லும் இடத்திற்கெல்லாம் அழைத்துச் செல்வதை உணருகின்றாள். இந்த செய்கை, தாய்க்கு பார்வதி தேவியின் பால் சிவபெருமான் வைத்துள்ள அன்பின் தன்மையை உணர்த்துகின்றது. அத்தகைய ஒருவரை தனது மகள் காதளிக்கின்றாளே என்ற பரிதாபம் தாய்க்கு ஏற்படுகின்றது. அந்த பரிதாபம் இந்த பாடலில் வெளிப்படுகின்றது.

கெண்டை = கெண்டை மீன். வண்டு வார் குழலாள் = வண்டுகள் மொய்க்கும் புது மலர்களை அணிந்த கூந்தலை உடைய பார்வதி அன்னை. துண்ட = அளவில் சிறியதாக இருக்கும். வான் பிறை = வெண்மை நிறம் உடைய பிறைச் சந்திரன்.

பொழிப்புரை

கெண்டை மீன் போன்று அழகான கண்களை உடையவளும், வண்டுகள் மொய்க்கும் புது மலர்கள் அணிந்த கூந்தலை உடையவளும் ஆகிய பார்வதி தேவியைத் தனது உடலில் ஏற்று தான் செல்லும் இடம் எல்லாம் அழைத்துச் செல்லும் ஒருவரை, வெண்மை நிறத்துடன் அளவில் குறைந்து அழிந்து போகும் நிலையில் இருந்த பிறைச் சந்திரனைத் தனது தலையில் அணிந்த சிவபெருமானைக் கண்டு அவன் மேல் காதல் கொண்டு எனது மகள் வாடுகின்றாளே. அவளது நிலை மிகவும் பரிதாபமானது. இந்த நிலையை அவள் ஏன் உணராமல் இருக்கின்றாள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.