முகப்பு
தினம் ஒரு தேவாரம்

57. பாறலைத்த படுவெண் - பாடல் 4

அன்னியூர் தளத்தில் உறைகின்றார்.

Updated On : 6 ஏப்ரல், 2017 at 5:51 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:40 PM

வேத கீதர் விண்ணோர்க்கும் உயர்ந்தவர்
சோதி வெண்பிறை துன்று சடைக்கு அணி
நாதர் நீதியினால் அடியார் தமக்கு
ஆதியாகி நின்றார் அன்னியூரரே
 

விளக்கம்

துன்று = நெருங்கிய. நீதி = நியதி, ஆகமங்களிலும், சாத்திரங்களிலும், வேதங்களிலும் சிவ வழிபாடு குறித்து சொல்லப்பட்டுள்ள முறை. அடியார் தமக்கு ஆதியாகி நின்றவர் பெருமான் என்று அப்பர் பிரான் குறிப்பிடுவது நமக்கு திருப்பள்ளி எழுச்சியின் (திருவாசகம்) முதல் பாடலை நினைவுக்கு கொண்டு வருகின்றது. எந்த ஒரு செயலும் நடைபெற ஒரு முதற்பொருள் அல்லது மூலதனம் வேண்டும். இந்த முதல் நமது கண்ணுக்குத் தெரிகின்ற பருப்பொருளாக அமைந்த பொருள். ஆனால் நமது கண்ணுக்குப் புலப்படாத, பொறி புலன்களுக்கு அகப்படாத, மூலதனம்தான் இறைவன். அந்த இறைவன் இல்லையேல் உயிர்களின் வாழ்வு ஒரு விநாடிகூட நீடிக்காது. இவ்வாறு அனைத்து உயிர்களின் வாழ்வுக்கும் ஆதியாக இருக்கும் இறைவனை, வாழ்முதல் என்று மணிவாசகர் கூறுவது போன்று, ஆதி என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

Advertisement

போற்றி என் வாழ்முதல் ஆகிய பொருளே
    புலர்ந்தது பூங்கழற்கு இணை துணை மலர் கொண்டு
ஏற்றி நின் திருமுகத்து எமக்கு அருள் புரியும்
    எழில் நகை கொண்டு நின் திருவடி தொழுகோம்
சேற்று இதழ் கமலங்கள் மலரும் தண்வயல் சூழ்
    திருப்பெருந்துறை உறை சிவபெருமானே
ஏற்று உயர் கொடி உடையாய் எமை உடையாய்
    எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே

ஒவ்வொரு விநாடியும் நமது வாழ்வுக்கு அடிப்படையாக இருக்கும் பெருமானை, போற்றி என்ற சிறந்த சொல்லின் மூலம் அடிகளார் போற்றுகின்றார். பெருமானின் திருவடிகளுக்கு இணையான இரண்டு தாமரை மலர்களைக் கொண்டு உமது திருவடியில் சமர்ப்பித்த எம்மை, உனது அழகிய புன்முறுவலைக் கண்டு மகிழ்ந்தவாறு உமது திருவடிகளைத் தொழுகின்றேன் என்று கூறும் அடிகளார், பெருமான் தன்னை அடிமையாக ஏற்றுக்கொண்டதாக இங்கே கூறுகின்றார். தனது வாழ்வுக்கு அடிப்படை என்று மணிவாசகர் கூறுவது போன்று, நாம் உண்ணும் சோறாகவும் பருகும் தண்ணீராகவும் இருக்கும் பெருமாள் என்று நம்மாழ்வார் கூறும் பாசுரத்தை நாம் இங்கே காண்போம்.

உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலை எல்லாம்
கண்ணன் எம்பெருமான் என்றென்றே கண்கள் நீர் மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவில்
திண்ணம் என் இளமான் புகும் ஊர் திருக்கோளூரே

பசி மிகுந்து இருப்பவனுக்கு கிடைத்த சோறு போலவும், மிகுந்த தாகத்துடன் இருப்பவனுக்கு கிடைத்த நீர் போலவும், வயிறார உண்டவனுக்கு உண்ட உணவு செரிப்பதற்கு உதவும் வெற்றிலை போலவும் இனிக்கும் பெருமாள் என்று சொல்லியவாறு தனது கண்களில் நீர் மல்கியவாறு பராங்குச நாயகி திருக்கோளூர் சென்றதாக நாயகியின் தாய் கூறுவதாக அமைந்த அகத்துறை வகையைச் சார்ந்த பாசுரம்.

இறைவனிடம் அளவு கடந்த பத்தி உள்ள அடியார்கள், எந்த மதத்தினைச் சார்ந்தவராக இருந்தாலும் அவர்களது உணர்வுகள் ஒன்றுபோல் இருப்பதை நாம் உணரலாம்.

பொழிப்புரை

வேதங்களை இசையுடன் ஓதுபவரும், தேவர்களுக்கு எட்டாது உயர்ந்து விளங்குபவரும், வெண்மை நிறத்துடன் கூடி ஒளிவீசும் பிறைச் சந்திரனை நெருக்கமாக உள்ள தனது சடையில் அணிந்த தலைவரும், வேதங்கள் சைவ ஆகமங்கள் சாத்திரங்கள் ஆகியவைகளில் கூறப்பட்டுள்ள வழிமுறையில் தன்னை வணங்கும் அடியார்களுக்கு முழுமுதற் பொருளாக நின்று அருள் புரிபவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தளத்தில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.