57. பாறலைத்த படுவெண் - பாடல் 6
உயிர்களுக்கு நலம் நல்கும்
வெந்த நீறு மெய் பூசு நன்மேனியர்
கந்த மா மலர் சூடும் கருத்தினர்
சிந்தையார் சிவனார் செய்ய தீ வண்ணர்
அந்தணாளர் கண்டீர் அன்னியூரரே
விளக்கம்
வெந்த நீறு = திருநீறு. சிவம் = மங்களம். சிவனார் = மங்களம் செய்பவர். அந்தணாளர் = அம்+தண்+ஆளர், உள்ளத்தில் குளிர்ச்சி, அதாவது கருணை உடையவர். சிந்தையார் = அடியார்களின் சிந்தைனையில் நிறைந்தவர். இறைவனை அறவாழி அந்தணன் என்று வள்ளுவப் பெருந்தகை குறிப்பிடுவது நமது நினைவுக்கு வருகின்றது. உயிர்களின் நன்மை கருதி அறம் உரைத்த பெருமான், அறத்தின் வடிவமாகவும் அறத்தின் பயனாகவும் இருந்து உயிர்களுக்கு அருள்புரியும் பொருட்டே என்பதால் குளிர்ந்த மனதினை உடையவன் என்று பெருமானை அப்பர் பிரான் குறிப்பிடுகின்றார்.
Advertisement
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கு அல்லால்
பிறவாழி நீத்தல் அரிது
பொழிப்புரை
திருநீற்றினை தனது உடல் முழுவதும் பூசுபவரும், உயிர்களுக்கு நலம் நல்கும் திருமேனியை உடையவரும் ஆகிய பெருமான், நறுமணம் நிறைந்த மலர்களை விருப்பத்துடன் சூடும் எண்ணத்தினை உடையவராக விளங்குகின்றார். அடியார்களின் சிந்தனையில் நிறைந்துள்ள பெருமான், உயிர்களுக்கு நன்மைகள் செய்பவராகவும், சிவந்த மேனியராகவும், திகழ்கின்றார். உயிர்கள் பால் கருணை கொண்டு உயிர்கள் உய்யும் பொருட்டு அறத்தினை உரைத்த பெருமான், அறத்தின் வடிவாகவும் பயனாகவும் விளங்குகின்றார். அவர்தான் அன்னியூர் தளத்தில் உறைகின்றார் என்பதை உணர்ந்து அவரைக் கண்டு மகிழ்வீராக.