57. பாறலைத்த படுவெண் - பாடல் 9
தீவண்ண மேனியராய் விளங்குபவரும்
எரிகொள் மேனியர் என்பு அணிந்து இன்பராய்
திரியும் மூவெயில் தீயெழச் செற்றவர்
கரிய மாலொடு நான்முகன் காண்பதற்கு
அரியராகி நின்றார் அன்னியூரரே
விளக்கம்
எலும்புகளை அணிந்து இன்பமாக இருப்பவராக பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். சர்வ சங்கார காலத்தில்தான், பெருமான் எலும்புகளை மாலையாக அணிந்துகொண்டும், பிரமன் மற்றும் திருமாலின் இறந்த உடல்களைத் தனது தோளில் வைத்துக்கொண்டும் நடனம் ஆடுகின்றார். தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக்கொள்ளாத நிலையில் எண்ணற்ற உயிர்கள் இருப்பதால், அந்த உயிர்களின் பால் கருணை கொண்டு மறுபடியும் உலகத்தைத் தோற்றுவிக்கவும், உயிர்களை அவற்றின் வினைத் தொகைகளுக்கு ஏற்றவாறு தகுந்த உடல்களுடன் பொருத்தவும் இறைவன் திருவுள்ளம் கொள்கின்றார். உயிர்களின் பால் கருணை கொண்டு, அந்த உயிர்கள் தங்களது வினைகளைக் கழித்துக் கொள்வதற்கு மீண்டு வாய்ப்புகள் அளிக்கப்படுவதால், சில உயிர்களேனும் தங்களது வினைகளைக் கழித்துக்கொண்டு தன்னை வந்த அடையலாம் என்ற நம்பிக்கையில் இறைவன் இன்பம் உறுகின்றார். இதனால்தான் எலும்புகளை அணிந்துள்ள பெருமான் இன்பமாக இருக்கின்றார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுகின்றார்.
Advertisement
இன்பராய் என்ற சொல்லினைத் திரிபுரத்து அரக்கர்களின் செய்கையுடன் இணைத்துக்கொண்டு, அடுத்தவர்களுக்குத் துன்பம் விளைவிப்பதில் இன்பம் அடைந்த அரக்கர்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.
ஆகாயத்தில் திரிந்துகொண்டிருந்த கொட்டைகளில் அமர்ந்தவாறு, தாங்கள் நினைத்தவிடத்தில் அந்த கோட்டைகளை கீழே இறக்கி அதன் அடியில் மாட்டிக்கொண்ட உயிர்களுக்குத் துன்பம் இழைத்து மகிழ்ச்சி அடைந்தவர்கள் அல்லவா. மூவெயில் = மூன்று கோட்டைகள். செற்றவர் = அழித்தவர்.
பொழிப்புரை
தீவண்ண மேனியராய் விளங்குபவரும், முற்றூழிக் (சர்வசங்கார) காலத்தில் எலும்புகளை அணிந்தவராக தங்களது வினைகளை முற்றிலும் கழித்துக்கொள்ளாத உயிர்களுக்கு வினைகளைக் கழித்துக்கொள்வதற்கு வாய்ப்பு கொடுக்கும்முகமாக மறுபடியும் உலகினைத் தோற்றுவிக்கத் திருவுள்ளம் கொண்டதால் இன்பத்துடன் இருப்பவரும், ஆகாயத்தில் தங்களது விருப்பம் போன்று திரிந்து கொண்டிருந்த மூன்று கோட்டைகளையும் தீயினில் எரிந்து அழியுமாறு திரிபுரத்து அரக்கர்களை வென்றவரும், கரிய நிறத்தினை உடையவரான திருமாலும் பிரமனும் காண முடியாதபடி, மண்ணுக்கும் விண்ணுக்கும் தீப்பிழம்பாக நின்றவரும் ஆகிய பெருமான் அன்னியூர் தலத்தில் உறைகின்றார்.