58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 3
புலியின் தோலை உரித்தவனாகிய
பொய் தொழாது புலி உரியோன் பணி
செய்து எழா எழுவார் பணி செய்து எழா
வைது எழாது எழுவார் எள்க நீர்
கை தொழா எழுமின் கரக் கோயிலே
விளக்கம்
பொய் = நிலையில்லாத உலகப் பொருட்கள். சிவபெருமானைத் தொழும் அடியார்களை மற்றவர் ஏளனம் செய்த நிலை அப்பர் காலத்திலும் இருந்ததை நாம் இந்த பாடல் மூலம் உணரலாம். நாத்திகத்தை ஒரு நெறியாக கருதி, நாத்திக மதத்தை உலகாயதன் மதம் என்று சைவ சித்தாந்தம் குறிப்பிடுகின்றது.
Advertisement
பொழிப்புரை
நிலையில்லாத பொருட்களாக இருந்தாலும், நிலையானது போன்று பொய்யான தோற்றத்தை அளிக்கும் உலகப் பொருட்களின் வயப்படாது, புலியின் தோலை உரித்தவனாகிய சிவபெருமானுக்கு அடிமைத் தொழில் செய்து வாழும் அடியார்களுக்கு பணிவிடை செய்து, கரக்கோயிலில் உறையும் பெருமானையும் தொழுது வாழ்வினில் உய்வினை அடைவீர்களாக. இறைவனை இகழ்வதே தங்கள் நோக்கமாகக் கொண்ட மனிதர்கள் உங்கள் இகழ்ந்தாலும், அந்த இகழ்ச்சியை நீங்கள் பொருட்படுத்தாமல், உங்களது பணியினை தவறாமல் செய்வீர்களாக.