58. தளரும் கோளரவத்தொடு - பாடல் 7
விண்ணுலகில் உள்ள தேவர்கள்
பண்ணினார் மறை பல் பல பூசனை
மண்ணினார் செய்வது அன்றியும் வைகலும்
விண்ணினார்கள் வியக்கப் படுவன
கண்ணினார் கடம்பூர் கரக் கோயிலே
விளக்கம்
பண்ணினார் = பண்ணின் ஆர், பண்கள் பொருந்திய மண்ணுலகத்தில் உள்ளவர்கள் செய்யும் வழிபாடு குறித்து விண்ணுலகில் உள்ள தேவர்கள் வியப்பதாக இந்த பாடலில் அப்பர் பிரான் சொல்கின்றார். இவ்வாறு அவர் கூறுவது நமக்கு திருவாசகம் திருப்பள்ளியெழுச்சி பதிகத்தின் கடைப் பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில் திருமாலும் பிரமனும். தாங்கள் புவனியில் பிறக்காததால், பெருமானை வழிபாட்டு உய்யும் வாய்ப்பினை இழந்ததால், தங்களது வாழ்க்கை வீணாக கழிகின்றது என்று கருதுவதாக மனிவாச்ச்சக்ர் கூறுகின்றார்.
Advertisement
புவனியில் போய்ப் பிறவாமையின் நாள் நாம்
போக்குகின்றோம் அவமே இந்தப் பூமி
சிவன் உய்யக் கொள்கின்ற ஆறு என்று நோக்கி
திருப்பெருந்துறை உறைவாய் திருமாலாம்
அவன் விருப்பு எய்தவும் அலரவன் ஆசைப் படவும் நின்
அலர்ந்த மெய்க் கருணையும் நீயும்
அவனியில் புகுந்து எமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமுதே
பள்ளி எழுந்தருளாயே
விண்ணுலகம் போகம் துய்ப்பதற்கான இடம்; அங்கே வினைகளின் பயனை அனுபவிக்க முடியுமே தவிர வினைகளை கழித்துக்கொள்ள முடியாது. தங்களது வினைகளைக் கழித்துக்கொள்வதற்கு அவர்கள் மண்ணுலகில் உள்ள தலங்களுக்கு வருவதை நாம், பல தலங்களில் மீது உள்ள தல புராணங்களில், பிரமன், திருமால், இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் பெருமானை வழிபாட்டு தங்களது சாபங்களைத் தீர்த்துக்கொண்ட வரலாறு மூலம் அறிகின்றோம். தேவர்கள் தேடியும் காண்பதற்கு அரியவனாக உள்ள பெருமான், மண்ணுலகில் வாழும் நம்மைப் போன்ற உயிர்கள் உய்யும் பொருட்டு, நம்மைத் தேடிக்கொண்டு இந்த உலகம் வருவதாகவும் மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார்.
மண்ணுலகத்தில் உள்ள அடியார்கள் இறைவனை வழிபடுவது, இம்மையில் தாங்கள் பல நலன்களும் பெறுவதுடன் மறுமையில் (அதாவது, இந்த பிறவி முடிந்தவுடன் முக்தி நிலை அடைந்து) பேரின்பம் அடையும் பொருட்டாகும். ஆனால் வானவர்கள் தாங்கள் பெற்றுள்ள போகத்தினை நிலை நிறுத்திக்கொள்ளும் பொருட்டும், தாம் மேலும் மேலும் உயர்ந்து தம்மை மற்றவர்கள் தொழும் நிலையினை அடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இறைவனை வழிபடுகின்றார்கள், எனவே அவர்களுக்கு, நிலவுலகத்தவர் செய்யும் வழிபாட்டின் நோக்கம் வியப்பினை அளிக்கின்றது. இந்த செய்தி மிகவும் அழகாக மணிவாசகர் திருச்சதகம் பதிகத்தில் கூறுகின்றார். மதுகரம் = வண்டு. முரலும் = இசைப் பாடல் போன்று ஒலிக்கும்.
வாழ்த்துவதும் வானவர்கள் தாம் வாழ்வான் மனம் நின் பால்
தாழ்த்துவதும் தாம் உயர்ந்து தம்மை எல்லாம் தொழவேண்டி
சூழ்த்து மதுகரம் முரலும் தாரோயை நாய் அடியேன்
பாழ்த்த பிறப்பு அறுத்திடுவான் யானும் உன்னைப் பரவுவனே
பொழிப்புரை
பண்ணுடன் வேத கீதங்களை இசைத்து, பல விதமான பூசனைகளை, நிலவுலகத்தில் உள்ளவர்கள் நாள்தோறும் செய்து கடம்பூர் கரக்கொயிலில் உறையும் பெருமானை வழிபடுகின்றார்கள். விண்ணுலகத்தில் உள்ள தேவர்கள் இந்த வழிபாடுகளைக் கண்டு வியக்கின்றார்கள்.