ருதுராஜ் கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? அஸ்வின் சொல்வதென்ன?
கெய்க்வாட்டின் பேட்டிங் அணுகுமுறை சரியா? என்பது குறித்து இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கூறுவதைப் பற்றி...
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தன்னுடைய பேட்டிங் அணுகுமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் போட்டிகளில் தொடர்ச்சியாக தோல்விகளைச் சந்தித்த சென்னை அணி, கடைசியாக நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தில்லி மற்றும் கொல்கத்தா அணிகளை வீழ்த்தி தொடர்ந்து 2 வெற்றிகளைப் பெற்றுள்ளது.
தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்கி ரன்கள் எடுக்கத் திணறி வரும் கேப்டன் ருதுராஜ், கடந்து 5 போட்டிகளில் மொத்தமாக வெறும் 63 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த சீசனில் அவருடைய அதிகபட்சமாக 28 ரன்கள் விளாசியிருக்கிறார்.
Advertisement
அதேநேரத்தில், இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனுடன் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவது குறித்து விவாதங்கள் எழுந்துள்ளதால் ருதுராஜ் மூன்றாவது இடத்தில் இறங்குவாரா? என்றும் எதிர்பார்ப்புகள் சென்னை அணி ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
இதுதொடர்பாக அஷ்வின் கூறுகையில், “நான் கேட்க விரும்புவது என்னவென்றால், ஆயுஷ் மாத்ரே அல்லது சஞ்சு சாம்சனைப் பார்க்கும்போது, அவர்கள் திடலில் இறங்கி சரியான முடிவுகளை எடுக்கின்றனர். ஆனால் ருதுராஜ், பந்தைக் குறுக்காக அடித்து சீக்கிரமே தனது விக்கெட்டைப் பறிகொடுத்து விடுகிறார்.
அவர் தனது இன்னிங்ஸின் தொடக்கத்தில் சற்று நிதானமாக ஆட வேண்டும். பந்தை சரியாக டைமிங் செய்ய முயன்று, மேலும் தரையோடு தரையாக விளையாட வேண்டும். அது அவருக்குப் பெரிதும் உதவும்” எனத் தெரிவித்தார்.