82. காலை எழுந்து கடிமலர் - பாடல் 6
அஞ்ச வேண்டாம்
பாடல் 6:
வல்லாடி நின்று வலி பேசுவார் கோளர்
வல்லசுரர்
கொல்லாடி நின்று குமைக்கிலும் வானவர்
வந்து இறைஞ்சச்
சொல்லாடி நின்று பயில்கின்ற சோற்றுத்துறை
உறைவார்
வில்லாடி நின்ற நிலை எம் பிரானுக்கு அழகியதே
விளக்கம்:
கோளர்=தீமையால் கொள்ளப்பட்டவர்கள், தீயவர்கள்: வல்லாடி நின்று=தங்கள் வலிமையை பறை சாற்றி வம்புச் சண்டைக்கு இழுக்கும்:
பொழிப்புரை:
தங்களது வலிமையை பறை சாற்றியவாறு அசுரர்கள், தேவர்களை வம்புச் சண்டைக்கு இழுத்து, அவர்களை கொல்வதாக அச்சுறுத்தினார்கள். அவர்களது மிரட்டலை பொருட்படுத்தாது, தேவர்கள் சோற்றுத்துறை தலம் வந்து சிவபிரானை வணங்கி தங்களது குறைகளைச் சொல்லி, அவற்றைத் தீர்க்குமாறு வேண்டினார்கள். அவர்களுடன் உரையாடி, அவர்களை அஞ்ச வேண்டாம் என்று ஆறுதல் கூறி, அவர்களை காப்பாற்றும் பொருட்டு, தனது வில்லை ஏந்திய நிலையில் சிவபெருமான் நின்ற கோலம் மிகவும் அழகாக இருந்தது.
Advertisement