51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 4
திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும்
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM
தந்தையும் தாயும் ஆகி தானவன் ஞானமூர்த்தி
முந்திய தேவர் கூடி முறைமுறை இருக்குச் சொல்லி
எந்தை நீ சரணம் என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச்
சிந்தையுள் சிவமதானார் திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
தானவன் = தானம் வழங்குபவன், கொடை வள்ளல்.
Advertisement
பொழிப்புரை
திருச்செம்பொன்பள்ளி தலத்தில் உறையும் சிவபெருமான், அனைவர்க்கும் தந்தையாகவும் தாயாகவும், அவர்கள் வேண்டியது அளிக்கும் கொடை வள்ளலாகவும், ஞான வடிவினராகவும் விளங்குகின்றார். மேம்பட்ட தேவர்கள் எல்லோரும் ஒன்றுகூடி, இருக்கு முதலாய நான்கு வேதங்களை முறையாக சொல்லி, பெருமானே, நாங்கள் உன்னிடம் சரணடைகின்றோம் என்று சிவபெருமானை புகழ்ந்து வணங்க, அவர்களின் சிந்தையில் சிவமாக, திருச்செம்பொன்பள்ளியில் உறையும் பெருமான் விளங்குகின்றார்