51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 6
உலகத்தின் உண்மையான இயல்பை
ஞாலமும் அறிய வேண்டில் நன்றென வாழலுற்றீர்
காலமும் கழியலான கள்ளத்தை ஒழியகில்லீர்
கோலமும் வேண்டா ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில்
சீலமும் நோன்பும் ஆவார் திருச்செம்பொன் பள்ளியாரே
விளக்கம்
ஞாலம் = உலகம். இங்கே உலகத்தின் உண்மை நிலை என்று பொருள் கொள்ள வேண்டும். சீலம் = ஒழுக்கம்.
Advertisement
பொழிப்புரை
உலகத்தின் உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல், நீங்கள் வாழும் வாழ்க்கை நல்ல வாழ்க்கை என்று கருதி பொழுதினை வீணாக கழித்து வாழும் மனிதர்களே, உலகத்தின் உண்மையான இயல்பை புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினால், நீங்கள் வாழும் வஞ்சக வாழ்க்கையை விடுத்து, போலியான வேடத்துடன் இறைவனை வணங்குவதுபோல் நடிப்பதை நிறுத்தி, மனதில் உள்ள ஆறு தீய குணங்களை (காமம், குரோதம், மோகம், உலோபம், மதம், மாற்சரியம்) அறவே ஒழித்தால், சிவபெருமான் உங்களை நல்ல ஒழுக்கத்தில் செலுத்தி, இறை உணர்வில் நிறுத்தி உதவுவார்.