முகப்பு
தினம் ஒரு தேவாரம்

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 7

இறைவன் பால் அன்பு வைத்து வழிபடும்

Updated On : 9 மார்ச், 2017 at 3:54 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM

புரிகாலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்
எரிகாலே மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்
தெரிகாலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று
திரிகாலம் கண்ட எந்தை திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

நேசம் = அன்பு. கால் = காற்று. எரிகாலே மூன்றும் = நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம், நீர், நிலம் ஆகிய பூதங்கள். புண்டரீகம் = இதயத் தாமரை. புண்டரீகத்தார் = இதயத் தாமரையில் இடம் கொண்டிருப்பவர். புரி = இடைவிடாது. மூன்று சந்தி = இரவும் காலையும் சந்திக்கும் உதயம், முன்பகலும் பின்பகலும் சந்திக்கும் நண்பகல். மற்றும் மாலையும் இரவும் சந்திக்கும் அந்தி நேரம். போலி வேடதாரிகளாக சிவபெருமானை வணங்கும் மனிதர்களை, முந்தைய பாடலில் குறிப்பிடும் அப்பர் பிரான், இந்த பாடலில், உண்மையான அன்பினை இறைவன்பால் வைத்து வழிபடும் அடியார்களுக்கு எவ்வாறு இருப்பார் என்று கூறுகின்றார். .

Advertisement

பொழிப்புரை

இடைவிடாது இறைவன் பால் அன்பு வைத்து வழிபடும் அடியார்களின் இதயத் தாமரையில் வீற்றிருப்பவர் சிவபெருமான். ஐம்பூதங்களாக இருக்கும் சிவபெருமானை தேவர்கள் வணங்குகின்றார்கள். காலை, நண்பகல், மாலை ஆகிய மூன்று சந்திக் காலங்களிலும், அடியார்கள் சிவபெருமானின் திருவடிகளை தியானித்து வணங்க, இறந்தகாலம், நிகழ்காலம், மற்றும் எதிர்காலம் ஆகிய மூன்று காலங்களையும் கடந்தவராய் விளங்கும் சிவபெருமான் திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.