முகப்பு
தினம் ஒரு தேவாரம்

51. ஊனினுள் உயிரை வாட்டி - பாடல் 9

என்றும் அழியாமல் இருக்கும் வேதங்களில்

Updated On : 9 மார்ச், 2017 at 3:55 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:21 PM

ஓவாத மறை வல்லானும் ஓதநீர் வண்ணன் காணா
மூவாத பிறப்பிலாரும் முனிகள் ஆனார்கள் ஏத்தும்
பூவான மூன்று முன்னூற்று அறுபதும் ஆகும் எந்தை
தேவாதி தேவர் என்றும் திருச்செம்பொன் பள்ளியாரே
 

விளக்கம்

ஓவாத = அழியாத. ஓதநீர் = கடல் நீர். மூவாத பிறப்பிலார் = மூப்பு அடையாத உடலினை உடைய தேவர்கள். பொதுவாக, ஒரு மாதம் என்பது முப்பது நாட்களைக் கொண்டதாக கருதப்படுகின்றது. அவ்வகையில் வருடத்திற்கு முன்னூற்று அறுபது நாட்கள் என்று நாம் கொள்ளலாம். முனிவர்கள் வருடத்தின் அனைத்து நாட்களிலும் மூன்று வேளைகளிலும் பூக்களைக் கொண்டு சிவபெருமானை வழிபடும் நிலை இங்கே குறிப்பிடப்படுகின்றது. வாச மலரெலாம் ஆனாய் நீயே எனும் திருவையாறு பதிகத்தின் திருவாக்குப்படி, முனிவர்கள் வழிபடும் மலர்களாக இறைவன் உள்ளான் என்று இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார். அடியார்கள் வணங்கித் துதிக்கும் பாடல்களாக சிவபெருமான் உள்ளார் என்று முந்தைய பாடலில் கூறிய அப்பர் பிரான், இந்த பாடலில் அடியார்கள் வழிபடும்போது தூவும் மலர்களாக உள்ளதாக கூறுகின்றார்.

Advertisement

பொழிப்புரை

என்றும் அழியாமல் இருக்கும் வேதங்களில் வல்லவனாகிய பிரமனும், கடல்நீரின் நிறத்தவனான திருமாலும் காண முடியாதவராய் நின்றவர் சிவபெருமான். மூப்படையாத உடலினைக் கொண்டுள்ள தேவர்களும், தவம் செய்யும் முனிவர்களும், வருடத்தின் அனைத்து நாட்களிலும் தினமும் மூன்று முறை மலர்களைத் தூவி சிவபெருமானை வாழ்த்தி வணங்குகின்றார்கள். இவ்வாறு வணங்கும் முனிவர்களுக்கு தந்தையாகவும், தேவர்களுக்கு தேவனாகவும் விளங்கும் சிவபெருமான் திருச்செம்பொன்பள்ளியில் உறைகின்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.