முகப்பு
தினம் ஒரு தேவாரம்

48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 4

குந்த வேகத்துடன் காற்று வீசும் கடற்கரையில்

Updated On : 4 ஜனவரி, 2017 at 5:25 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 4:09 PM

ஊனுற்ற வெண்தலை சேர் கையர் போலும் ஊழி பல
            கண்டிருந்தார் போலும்
மானுற்ற கரதலம் ஒன்று உடையார் போலும்
    மறைக்காட்டுக் கோடி மகிழ்ந்தார் போலும்
கானுற்ற ஆடல் அமர்ந்தார் போலும் காமனையும் கண்
        அழலால் காய்ந்தார் போலும்
தேனுற்ற சோலை திகழ்ந்து தோன்றும் திருச்சாய்க்காட்டு
        இனிது உறையும் செல்வர் தாமே


விளக்கம்

எந்தெந்த பொருட்கள் எவற்றினின்று நீங்கின என்று சென்ற பாடலில் விளக்கிய அப்பர் பிரான், இந்த பாடலில் எந்தெந்த பொருட்கள் எவற்றுடன் சேர்ந்து இருந்தன என்று கூறுகின்றார். பல ஊழிகளைக் கண்டவர் என்று பெருமானை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். ஊழிக் காலத்தைக் கண்டவர் வேறு எவரும் இல்லாத நிலையில், பல ஊழிகளைக் கடந்தவராக சிவபெருமான் இருப்பது அவரது அழியாத தன்மையை உணர்த்துவதாக உள்ளது. உற்ற = இணைந்து இருந்த, பொருந்திய.

மறைக்காட்டுக் கோடி = திருமறைக்காடு தலத்தின் அருகே உள்ள கோடிக்கரை. பொன்னியின் செல்வன் சரித்திர நாவலில், சதுப்பு நிலங்கள் நிறைந்த கோடிக்கரையில் மாட்டிக்கொண்ட வந்தியத்தேவன் கோடிக்கரை குழகரை கண்டதாக கல்கி அவர்கள் கூறுகின்றார். கோடிக்கரை குழகர் துணை ஏதுமின்றி தனியாக இருப்பது போன்று, தானும் ஆள் நடமாட்டம் ஏதும் இல்லாத சதுப்பு நிலக் காட்டினில் இருப்பது குறித்து வேதனை அடையும் வந்தியத்தேவன் கண்ணோட்டத்தில் அந்த தலத்து காட்சியை நமது கண் முன்னே கல்கி அவர்கள் கொண்டுவருவார். இந்த தலத்தின் மீது சுந்தரர் அருளிய தேவாரம் (7.32.1) இந்த நிலையினை மிகவும் அழகாக உணர்த்துகின்றது.

Advertisement

கடிதாய் கடற்காற்று வந்து எற்றக் கரை மேல்
குடி தான் அயலே இருந்தால் குற்றமாமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக் குழகீர்
அடிகேள் உமக்கு ஆர் துணையா இருந்தீரே

பெருமானே, மிகுந்த வேகத்துடன் காற்று வீசும் கடற்கரையில், அருகில் வீடுகள் ஏதும் இல்லாத இடத்தில், உமக்குத் துணையாக எவரும் இல்லாத நிலையில் நீர் இருப்பதைக் கண்ட எனது கொடிய கண்கள் என்று தனது ஆற்றாமையை சுந்தரர் வெளிப்படுத்தும் பாடல். தனக்குத் துணையாக எவரும் இல்லாத நிலையிலும், மிகுந்த மகிழ்வுடன் பெருமான் இருந்ததை குறிப்பிடும் வண்ணம், அப்பர் பிரான் கோடி மகிழ்ந்தார்போலும் என்று இந்த பாடலில் கூறுகின்றார். இன்றும் இந்த தலத்தின் திருக்கோயில் இதே நிலையில் இருப்பதை நாம் காணலாம். ஊருக்கு ஓரு கோடியில், மிகவும் குறைந்த வீடுகள் அருகில் இருக்க, பெருமான் இருப்பதை நாம் காணலாம்.

பொழிப்புரை

முன்னொரு காலத்தில் ஐந்து தலைகளுடன் இருந்த பிரமனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த சிவபெருமான், தசைகள் உலர்ந்து வெண்தலையாக மாறிய பின்னர் அந்த மண்டை ஓட்டினைத் தனது உண்கலனாகத் தனது கையில் ஏந்தி இருக்கின்றார். அவர் பல ஊழிகளைக் கண்டவர் ஆவார். தாருகவனத்து முனிவர்கள் ஏவிய மான் கன்றின் முரட்டுத் தன்மையை மாற்றி அந்த கன்றினைத் தனது கையினில் பொருத்திய சிவபெருமான், திருமறைக்காடு தலத்திற்கு அருகில் உள்ள கோடிக்கரை தலத்தில் குழகராக அமர்ந்து மகிழ்ந்தவர் ஆவார். தேன் நிறைந்த மலர்களை உடைய சோலைகள் திகழும் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.