நாடாளுமன்ற சிறப்பு அமர்வில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும்: காங்கிரஸ்
நாடாளுமன்றத்தில் நடைபெறவிருக்கும் சிறப்பு அமர்வில் காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என அக்கட்சி அறிவித்தது குறித்து...
நாடாளுமன்றத்தில் ஏப்.16 முதல் 18 வரையிலான தேதிகளில் காலை 11 மணிக்கு நடைபெறவிருக்கும் சிறப்பு அமர்வுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்ற மூன்று வரி உத்தரவை அக்கட்சி திங்கள்கிழமை (ஏப்.13) பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் பிறப்பித்த அறிக்கையில், இந்த சிறப்பு அமர்வின்போது முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்பட உள்ளன. மேலும், மகளிர் இடஒதுக்கீட்டுக்கான நாரி சக்தி வந்தன் அதினியம் 2023 மசோதாவை மத்திய அரசு அமல்படுத்த உள்ளதால் கட்சியின் நிலைப்பாட்ட்டுக்கு அனைத்து எம்.பி.க்களும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொண்டது.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவிகித மகளிா் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயா்த்துவதற்குமான மசோதாவை முன்வைப்பதை இந்த மூன்று நாள் சிறப்புக் கூட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement
2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலான தொகுதி மறுவரையறை மசோதாவை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதனால் தென்னிந்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் மக்களவையில் குறையும் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறது.
குறிப்பாக, இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வுக்காக மத்திய அரசு முன்மொழிந்துள்ள நிகழ்ச்சி நிரலானது, தொகுதி வரையறை குறித்து கடுமையான கவலைகளை எழுப்புவதாகத் தெரிவித்தார். மேலும், அதனை 'மிகவும் ஆபத்தானது' மற்றும் 'அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான தாக்குதல்' என்றும் குறிப்பிட்டிருந்தார்.
மூன்று வரி உத்தரவு என்பது கட்சியின் மிகக் கடுமையான வழிகாட்டுதலாகும். இது, உறுப்பினர்கள் அவையில் ஆஜராகி, கட்சியின் கொள்கைப்படி வாக்களிக்கவும், அதனைக் கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்துகிறது. இதை மீறினால், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் கட்சித் தலைவரால் தகுதி நீக்கம் செய்யப்படலாம்.