48. வானத்து இளமதியும் பாம்பும் - பாடல் 5
அதிகமாக பூக்கும் அழகிய கொன்றை மாலைகளை
கார்மல்கு கொன்றை அம் தாரார் போலும் காலனையும் ஓர்
உதையால் கண்டார் போலும்
பார் மல்கி ஏத்தப் படுவார் போலும் பருப்பதத்தே பல்லூழி
நின்றார் போலும்
ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் போலும் ஓத்தூர் ஒரு
நாளும் நீங்கார் போலும்
சீர்மல்கு பாடல் உகந்தார் போலும் திருச்சாய்க்காட்டு இனிது
உறையும் செல்வர் தாமே
விளக்கம்
மல்கு = மிகவும் அதிகமாக. அம் தாரார் = அழகிய மாலையினை உடையவர். உழலுதல் = திரிதல். மனிதர்கள் தங்களை பீடித்துள்ள ஆணவம் கன்மம் மாயை ஆகிய மலங்களை தனது பிச்சைப் பாத்திரத்தில் இட்டு உய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் பிச்சை எடுக்கும் பெருமான். அதிகமான மக்கள் உய்வினை அடைய வேண்டும் என்ற விருப்பத்துடன், அதிகமான மக்களிடம் பிச்சை கேட்கின்றார் என்று உணர்த்தும் முகமாக, ஊர் மல்கு பிச்சைக்கு உழன்றார் என்று அப்பர் பிரான் இந்த பாடலில் கூறுகின்றார்.
Advertisement
பொழிப்புரை
மழைக் காலத்தில் அதிகமாக பூக்கும் அழகிய கொன்றை மாலைகளை உடைய சிவபெருமான், சிறுவன் மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த இயமனை தனது காலால் உதைத்து அவன் கீழே வீழக் கண்டவர் ஆவார். உலகெங்கும் பரந்து நிற்கும் சிவபெருமான், பலராலும் போற்றப்படுபவர், மேலும் பல ஊழிக் காலங்களையும் கடந்து பருப்பதம் என்று அழைக்கப்படும் ஸ்ரீசைலம் தலத்தில் உறைகின்றார். மிகவும் அதிகமான மக்கள் தனக்குப் பிச்சையிட்டு உய்வினை அடைய வேண்டும் என்ற எண்ணத்துடன் உலகெங்கும் பிச்சைக்குத் திரியும் பெருமான், ஓத்தூர் என்று அழைக்கப்படும் தலத்தை விட்டு என்றும் நீங்காதவராக உள்ளார்; சிறந்த இன்னிசைப் பாடல்கள் கேட்டு மகிழ்பவராக, சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறையும் சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.