48. வானத்து இளமதியும் பாம்பும் -பாடல் 9
தனது அடியார்களின் அல்லல்களை அறுக்கும்
அல்லல் அடியார்க்கு அறுப்பார் போலும் அமருலகம்
தம்மடைந்தார்க்கு ஆட்சி போலும்
நல்லமும் நல்லூரும் மேயார் போலும் நள்ளாறு நாளும்
பிரியார் போலும்
முல்லை முகை நகையாள் பாகர் போலும் முன்னமே
தோன்றி முளைத்தார் போலும்
தில்லை நடமாடும் தேவர் போலும் திருச்சாய்க்காட்டு
இனிது உறையும் செல்வர் தாமே
விளக்கம்
முன்னமே தோன்றி முளைத்தார் என்று, பெருமான் எவராலும் தோற்றுவிக்கப்படவில்லை என்பதையும், அனைத்து உயிர்களுக்கும் முன்னமே தோன்றியவர் சிவபெருமான் என்பதையும் அப்பர் பிரான் இங்கே உணர்த்துகின்றார்.
Advertisement
பொழிப்புரை
தனது அடியார்களின் அல்லல்களை அறுக்கும் சிவபெருமான், தனது திருவடிகளைப் பற்றிக்கொள்ளும் அடியார்கள் விண்ணுலகம் ஆள்வதற்கான வாய்ப்பினை அளிக்கின்றார். நல்லம் மற்றும் நல்லூர் ஆகிய தலங்களில் பொருந்தி உறையும் சிவபெருமான் நள்ளாறு தலத்தினை என்றும் பிரியாமல் இருக்கின்றார். முல்லை அரும்பு போன்று வெண்மையான அழகான பற்களை உடைய பார்வதி தேவியைத் தனது உடலின் ஒரு பாகமாக ஏற்ற சிவபெருமான், அனைத்து உயிர்களும் தோன்றுவதற்கு முன்னமே, தான்தோன்றியாக முளைத்தவர் ஆவார். தில்லைச் சிற்றம்பலத்தில் நடமாடும் தேவராகிய சிவபெருமான் சாய்க்காடு தலத்தில், மிகுந்த விருப்பத்துடன் உறைகின்றார். இத்தகைய பண்புகளை உடைய சிவபெருமான், வேறு எவரிடமும் இல்லாத செல்வமாகிய முக்திச் செல்வத்தை உடையவர் ஆவார்.