50. தூண்டு சுடர்மேனி - பாடல் 8
தன்னுடன் ஊடல் கொண்டுள்ள பார்வதி
50. மருதங்களா மொழிவர் மங்கையோடு வானவரும் மாலயனும்
கூடித் தங்கள்
சுருதங்களால் துதித்துத் தூநீராட்டித் தோத்திரங்கள் பல
சொல்லிச் தூபம் காட்டிக்
கருதும் கொல் எம்பெருமான் செய் குற்றேவல் என்பார்க்கு
வேண்டும் வரம் கொடுத்து
விகிர்தங்களா நடப்பர் வெள்ளேறு ஏறி வெண்காடு மேவிய
விகிர்தனாரே
விளக்கம்
சுருதங்கள் = கேள்வி, இங்கே கேள்வியால் வரப்பெற்ற மந்திரங்கள். பண்டைய நாட்களில் வேதங்களும் வேத மந்திரங்களும் வாய்மொழியாக, குரு சீடனுக்கு சொல்ல, அவ்வாறு பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு கற்றவை; ஸ்ருதி என்ற வடமொழிச்சொல் சுருதம் என்று தமிழாக்கப்பட்டுள்ளது. விகிர்தங்கள் = வேறுபட்ட செயல்கள்.
Advertisement
மருதங்களா = மருதத் திணைச் சொற்களாக. மனைவியை உயர்வாக மதித்து, கணவன் தன்னை பணிவாக நினைத்துக் கூறும் சொற்கள். இந்த மொழிகள் மருத நிலத்து மங்கையரின் ஊடலைத் தீர்க்கும் மொழிகள் என்று தொல்காப்பியம் பொருள் அதிகாரம் சூத்திரம் குறிப்பிடுகின்றது. தன்னிடம் ஊடல் கொண்டுள்ள பார்வதி தேவியின் ஊடலைத் தீர்க்க வேண்டி, பெருமான் மருதங்கள் மொழிவதாக இங்கே அப்பர் பிரான் கூறுகின்றார்.
பொழிப்புரை
தன்னுடன் ஊடல் கொண்டுள்ள பார்வதி தேவியின் ஊடலைப் போக்க வேண்டி, மருதத் திணைச் சொற்களை சொல்லும் பெருமானை, திருமால் மற்றும் பிரமன் உள்ளிட்ட வானவர்கள் அனைவரும் தாங்கள் கேட்டறிந்த மந்திரங்களைக் கொண்டு பெருமானை துதித்து, தூய நீரால் நீராட்டி, அவரைப் புகழ்ந்து பல தோத்திரங்கள் சொல்லி, தூபம் காட்டி வழிபடுகின்றார்கள். மேலும் பெருமானே, நாங்கள் செய்யும் குற்றேவலை நீ ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டிய தேவர்களுக்கு அவர்கள் வேண்டிய வரங்களை கொடுத்து மகிழ்பவர் சிவபெருமான். இத்தகைய பண்புகளைக் கொண்ட பெருமான், அந்த தேவர்களிடமிருந்து மாறுபட்ட செயல்களை உடையவராக யநடந்துகொள்ளும் பெருமான் வெண்காடு தலம் சென்று உறைகின்றார்.