54. பொருத்திய குரம்பை தன்னை - பாடல் 8
உலக வாழ்க்கையில் மாயத்துள்ளே
சாமனை வாழ்க்கையான சலத்துளே அழுந்த வேண்டா
தூம நல் அகிலும் காட்டிச் தொழுது அடி வணங்குமின்னோ
சோமனைச் சடையுள் வைத்துத் தொன்னெறி பலவும்
காட்டும்
தூமனத் துருத்தியானைத் தொண்டனேன் கண்டவாறே
விளக்கம்
சாமனை வாழ்க்கை = சாம் + மனை + வாழ்க்கை. அழியும் தன்மை உடையும் இல்வாழ்க்கை. சலம் = கலக்கம், சஞ்சலம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு. தூம = தூய்மையான, நல்ல. சோமன் = சந்திரன். தொன்னெறி = தொன்மையான சிவநெறி. தூமம் = புகை.
Advertisement
நமது வினைகளை முற்றிலும் கழித்துக்கொண்டு இறைவனின் திருவடிகளைச் சென்றடைந்து நிலையான இன்பத்தினை அனுபவிப்பதே நமது வாழ்வின் குறிக்கோளாக இருக்க வேண்டும்; அவ்வாறு இல்லாமல் மனைவி, மக்கள், சுற்றம், கல்வி செல்வம் என்பவையில் பற்று வைத்து வாழும் வாழ்க்கையினை பித்த உலகு என்று மணிவாசகர் குறிப்பிடும் பாடல் கோத்தும்பீ பதிகத்தில் உள்ளது. செல்வம், மனைவி, மக்கள், சுற்றம், கல்வி ஆகியவை உலகினில் வாழும் நமக்கு இயல்பாக அமைந்துள்ளன. இவைகளுடன் கலந்து வாழ்க்கை நடத்தும் நாம், இவை அனைத்தும் நமது மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இன்றியமையாதவை என்றும், இவை அனைத்தும் நமது என்றும், கருதுகின்றோம். ஆனால் இவை அனைத்தும் நிலையற்றவை என்று உணர்ந்து, இவற்றுடன் கலந்து வாழ்ந்தாலும் இவற்றுக்கும் நமக்கும் நிலையான தொடர்பு ஏதும் இல்லை என்று வாழ்வது, தெளிவான சிந்தையுடன் வாழ்வதாகும். இறப்பு என்பது நமது வாழ்க்கையில் ஒரு நிலை என்று உணர்ந்து வாழ்வதே தெளிந்த சிந்தையுடன் வாழ்வதாகும். அவ்வாறு வாழ்வதற்கு, தனது உள்ளத்தில் உள்ள கலகங்களைத் தெளிவித்த பெருமான் என்று மணிவாசகர் இந்த பாடலில் கூறுகின்றார். வைத்த நிதி பெண்டிர் மக்கள் குலம் கல்வி என்னும்
பித்த உலகில் பிறப்போடு இறப்பு என்னும்
சித்த விகாரம் கலக்கம் தெளிவித்த
வித்தகத் தேவர்க்கே சென்று ஊதாய் கோத்தும்பீ
பொழிப்புரை
ஒரு நாள் அழியப்போகும் வஞ்சனையான இந்த உலக வாழ்க்கையில் மாயத்துள்ளே அழுந்தி இறைவனை வழிபடுவதற்கு மறந்துவிடாதீர்கள்; நல்ல அகில் புகையை காட்டி அவனது திருவடிகளை வணங்குவீர்களாக. சந்திரனைத் தனது பிறையில் சூடி அவனுக்கு வாழ்வளித்த கருணையாளன், அடியார்கள் உய்வதற்கு பல நல்ல தொன்மையான வழிகளை காட்டும் தூய உள்ளம் கொண்டவன் ஆகிய துருத்தி தலத்தில் உறையும் பெருமானை, அடியேன் வழிபாட்டு அவனைக் காணும் பேற்றினை பெற்றேன். நீங்களும் அவனை வழிபட்டு, அவனைக் காணும் பேற்றினை அடைவீர்களாக.