55. பட்ட நெற்றியர் பாய்புலி - பாடல் 4
அறிவே வடிவானவர்
மத்தமும் மதியும் வளர் செஞ்சடை
முத்தர் முக்கணர் மூசு அரவம் அணி
சித்தர் தீவணர் சீர் மணஞ்சேரி எம்
வித்தர் தாம் விருப்பாரை விருப்பரே
விளக்கம்
முத்தர் = இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர். முந்தைய பாடலில், இறைவனைப் பற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிய அப்பர் பிரான், இறைவன் பற்று அற்றவனாக இருக்கும் தன்மையை நமக்கு உணர்த்தி, அவனைப் பற்றிக்கொண்டால்தான் நாம் பற்றினை அறுக்கமுடியும் என்பதை நமக்கு உணர்த்துகின்றார். பெருமானைச் சரண் அடைந்ததால் அழியும் நிலையிலிருந்த சந்திரன் வளரத் தொடங்கிய செய்தி இங்கே கூறப்படுகின்றது. வித்தர் = வித்தகர், அறிவே வடிவானவர். சித்தர் = அடியார்களின் சித்தத்தில் இருப்பவர். சிவபெருமான் தன்னை விரும்பும் அடியார்களை விரும்பும் தன்மையை இங்கே அப்பர் பிரான் குறிப்பது, நமக்கு திருவாசகம் சிவபுராணத் தொடர் அன்பருக்கு அன்பனே என்பதை நினைவூட்டுகின்றது. சூரியன் சந்திரன் அக்னி ஆகிய மூன்று சுடர்கள், பெருமானின் மூன்று கண்களாக விளங்குகின்றன.
இந்த பாடலில் இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்கியவர் என்றும் அறிவே வடிவானவர் என்றும் இறைவனின் இரண்டு குணங்கள் உணர்த்தப்படுகின்றன. தன்வயத்தன் ஆதல், தூய உடம்பினனாக இருத்தல், இயற்கை உணர்வினன் ஆதல், முற்றும் உணர்தல், இயல்பாகவே பாசங்களிலிருந்து நீங்குதல், பேரருள் உடைத்தல், முடிவில்லாத ஆற்றல் உடைமை, வரம்பு இல்லாத இன்பம் உடைத்தல். ஆகிய எட்டு குணங்களை உடைய பெருமான் எண்குணத்தான் என்று திருமுறைப் பாடல்களில் பல இடங்களில் அழைக்கப்படுகின்றான்.
Advertisement
பொழிப்புரை
ஊமத்தை மலரை சடையில் அணிந்தவரும், தனது பிறைகள் அனைத்தும் தேய்ந்து அழியும் நிலையில் வந்து சரணடைந்த சந்திரனை, வளர் சந்திரனாக மாற்றித் தனது சடையில் அணிந்தவரும், இயல்பாகவே பாசங்களிலிருந்து விடுபட்டவரும், மூன்று கண்களை உடையவரும், தனது உடலில் மொய்க்கும் பாம்பினை அணிகலனாக அணிந்தவரும், அடியார்களின் சித்தத்தில் உறைபவரும், ஞானவடிவாக உள்ளவரும், தீயின் வண்ணத்து மேனியை உடையவரும் ஆகிய பெருமான் மணஞ்சேரியில் உறைகின்றார். அவர், தம்மை விரும்பும் அடியார்களை தாமும் விரும்பி, அந்த அடியார்களுக்கு பல விதங்களிலும் அருள்கள் புரிகின்றார்.