56. நோதங்கம் இல்லாதார் - பாடல் 8
எந்த உருவம்தான் அவனது உருவம்
கண் அமரும் நெற்றியார் காட்டார் நாட்டார் கனமழுவாள்
கொண்டதோர் கையார் சென்னிப்
பெண் அமரும் சடை முடியார் பேர் ஒன்று இல்லார்
பிறப்பிலார் இறப்பிலார் பிணி ஒன்றில்லார்
மண்ணவரும் வானவரும் மற்றையோரும் மறையவரும்
வந்து எதிரே வணங்கி ஏத்தப்
பண் அமரும் பாடலார் பைங்கண் ஏற்றார் பலி ஏற்றார்
பந்தணைநல்லூராரே
விளக்கம்
பேர் ஒன்றும் இல்லார் என்று அப்பர் பிரான் இங்கே கூறுவது நமக்கு திருவாசகம் தெள்ளேணம் பதிகத்தின் பாடல் ஒன்றினை நினைவூட்டுகின்றது. எந்த பெயரை வைத்து அழைத்தாலும், அந்த பெயர் உணர்த்தும் பொருளினைக் கடந்து நிற்கும் திறமை படைத்த இறைவனை என்னவென்று அழைப்பது, எந்த உருவம்தான் அவனது உருவம் என்று நாம் நினைப்பது, என்பதே மணிவாசகப் பெருமான் இங்கே எழுப்பும் கேள்வி. தனது அடியார்கள்பால் கருணை கொண்டு, அவர்களுக்கு அருள்புரியும் பொருட்டு அவன் எடுத்த சில வேடங்களையே நாம் அறிவோம் என்பதால் அவனது வேடங்களையும் நம்மால் முழுதுமாக அறிந்துகொள்ள முடியாது அல்லவா. இருந்தாலும் அவனை எவ்வாறு வழிபடுவது ஏதாவது ஒரு பெயரினை சொல்லித்தானே வழிபட வேண்டும் என்பதால், ஆயிரம் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவீர்கள் என்று கூறுகின்றார். தெள்ளேணம் என்பது அரிசியில் உள்ள கற்களையும் பதர்களையும் புடைத்து பிரித்து எடுக்கும் முறை. நமது அன்றாட வாழ்க்கையின் பல செயல்களிலும் இறைவுணர்வினை புகுத்தும் முறையில், அம்மானை, பூவல்லி, பொற்சுண்ணம், தெள்ளேணம் ஆகிய பதிகங்களை அருளியவர் மணிவாசகர்.
Advertisement
திருமாலும் பன்றியாய் சென்று உணராத் திருவடியை
உரு நாம் அறிய ஓர் அந்தணனாய் ஆண்டுகொண்டான்
ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும் இல்லாற்கு ஆயிரம்
திருநாமம் பாடி நாம் தெள்ளேணம் கொட்டாமோ
காட்டார் நாட்டார் என்று காடுகளிலும் நாடுகளிலும் வாழும் பெருமான் என்று உலகெங்கும் அவன் பரவியிருக்கும் நிலையினை அப்பர் பெருமான் குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை
நெற்றியில் கண் உடைய பெருமானாகிய அவர், காடு நாடு ஆகிய இடங்களை விரும்பி, உலகெங்கும் பரவியுள்ளார். தனது கையில் பெருமை மிக்க மழுவாள் படையை உடைய அவர், தனது சடை முடியில் கங்கை நதியை ஏற்றுள்ளார். தனக்கென ஒரு பெயர் இல்லாதவாராக உள்ள அவர், பிறப்பு இறப்பு பிணி மூப்பு ஆகியவற்றைக் கடந்தவர். மண்ணுலகத்தவரும் விண்ணுலகத்தவரும் மற்றவர்களும் மறையவர்களும், அவர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்று வணங்கி பண்ணுடன் பொருந்திய பாடல்களைப் பாடி அவரை வாழ்த்துகின்றார்கள். இத்தகைய சிறப்புகளைக் கொண்ட அவர், பசுமையான கண்களை உடைய எருதினை வாகனமாக ஏற்றவராய், பல இடங்களிலும் திரிந்து பிச்சை ஏற்கின்றார். இவர்தான் பந்தணைநல்லூர் தலத்தில் வீற்றிருக்கும் பெருமான் ஆவார்.