முகப்பு
தினம் ஒரு தேவாரம்

60. ஆராரும் மூவிலைவேல் - பாடல் 8

ஓமாம்புலியூர் தலத்தில் உறைபவனும்

Updated On : 4 மே, 2017 at 6:00 PM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 7:55 PM

சேர்ந்தோடு மணிக் கங்கை சூடினானைச் செழு மதியும் பட
                அரவும் உடன் வைத்தானைச்
சார்ந்தோர்கட்கு இனியானைத் தன் ஒப்பில்லாத் தழல்
                    உருவைத் தலைமகனைத் தகை நால்வேதம்
ஓர்ந்து ஓதிப் பயில்வார் வாழ் தரும் ஓமாம்புலியூர்
                        உள்ளானைக் கள்ளாத அடியார் நெஞ்சில்
சேர்ந்தானை வடதளி எம் செல்வன் தன்னைச் சேராதே
                    திகைத்து நாள் செலுத்தினேனே
 

விளக்கம்

தகை = பெருமை வாய்ந்த. கள்ளாத அடியார் = நெஞ்சினில் கள்ளமும் வஞ்சனையும் இல்லாத அடியார்கள். ஓர்ந்து = ஆராய்ந்து. இந்த பாடலில் தலைமகன் என்று அப்பர் பிரான் இறைவனை அழைக்கின்றார். இறைனிடம் உள்ள அன்பு மற்றும் நெருக்கம் காரணமாக மகன் என்று அழைக்கின்றார் என்று நாம் உணர வேண்டும். ஒன்றுக்கொன்று வேறுவேறு இயல்புகளைக் கொண்ட கங்கை நதி, சந்திரன் பாம்பு ஆகிய மூன்றினையும் ஒரே இடத்தில் வைத்து அவர்களுக்கு இடையே இருக்கும் பகையினை தீர்த்த இறைவனின் வல்லமை இங்கே உணர்த்தப்படுகின்றது.

Advertisement

பொழிப்புரை

மணிகளைக் கொழித்துக்கொண்டு ஓடும் கங்கை நதியினைத் தனது சடையில் சூடியவனும், அழகிய சந்திரனையும் படமெடுத்து ஆடும் பாம்பினையும் அவைகளுக்கு இடையே உள்ள பகையினைத் தீர்த்து ஒரே இடத்தில் வைக்கும் வல்லமை வாய்ந்தவனும், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகவும் இனியவனாக இருப்பவனும், தனக்கு ஒப்பார் ஒருவரும் இல்லாத வகையில் செந்தழலின் நிறத்தவனும், அனைவர்க்கும் தலைமகனாகத் திகழ்பவனும், பெருமை வாய்ந்த நான்கு வேதங்களையும் பொருளினை ஆராய்ந்து பயிலும் அந்தணர்கள் வாழும் ஓமாம்புலியூர் தலத்தில் உறைபவனும், தங்கள் மனதினில் கள்ளமும் வஞ்சனையும் இல்லாத அடியார்களின் மனதினைச் சென்று சேர்பவனும், வடதளி என்று அழைக்கப்படும் திருக்கோயிலில் உறையும் செல்வனாகிய சிவபெருமானை, அடையாது குறைந்த அறிவினை உடையவனாக இருந்த அடியேன் திகைத்து மயங்கி, எனது வாழ்நாளை வீணாக கழித்தேன்.

பாடல் 9

சிதைந்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.