முகப்பு
தினம் ஒரு தேவாரம்

74. நல்லர் நல்லதோர் - பாடல் 6

அச்சத்தினால் கலக்கம்

Updated On : 24 செப்டம்பர், 2017 at 12:00 AM
பகிர்:
Updated On : 29 ஜனவரி, 2024 at 10:25 PM

பாடல் 6:
    வம்பு பூங்குழல் மாது மறுகவோர்
    கம்ப யானை உரித்த கரத்தினர்
    செம்பொனார் இதழும் மலர் செஞ்சடை 
    நம்பர் போல் திரு நாகேச்சரவரே

விளக்கம்:
மறுக=அஞ்சி மயங்குமாறு; கம்ப யானை=அசையும் யானை; யானை நடக்கும் போதும் யானையின் துதிக்கை அசைந்து கொண்டே இருக்கும். அதனை உணர்த்தும் வண்ணம் கம்ப யானை என்று அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார். வம்பு=நறுமணம்; யானையின் பசுமையான தோல் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்று நம்பப்படுகின்றது. இறைவன் தன்னை எதிர்த்து வந்த யானையைக் கொண்டு அதன் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்ட நிகழ்ச்சி இறைவனின் உடலுக்கு ஏதேனும் கேட்டினை விளைவிக்குமோ என்ற அச்சத்தை இறைவிக்கு ஏற்படுத்தியதால், இறைவி அடைந்த கலக்கம் இங்கே உணர்த்தப் படுகின்றது. இதழி=கொன்றை மலர்;    

பொழிப்புரை:
நறுமணம் உடையதும் பூக்கள் போன்று மேன்மையை உடையதுமாகிய கூந்தலை உடைய அன்னை உமையம்மை, இறைவன் தனது உடலின் மீது போர்த்துக் கொள்ளும் யானையின் பசுந்தோல் அவரது உடலுக்கு ஏதேனும் தீங்கினை விளைவிக்குமோ என்ற அச்சத்தினால் கலக்கம் அடையுமாறு, அசைந்து வந்த மதயானையின் தோலை உரித்துத் தனது உடலின் மீது போர்த்துக் கொண்டவர் சிவபெருமான். செம்பொன்னினைப் போன்று காணப்படும் கொன்றை மலர்களை தனது சடையில் அணிந்துள்ள பெருமான் அடியார்களால் விரும்பப் படுகின்றார். அத்தகைய பெருமான், நாகேச்சரம் எனப்படும் தலத்தின் இறைவர் ஆவார்

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.