93. மடையில் வாளைபாய - பாடல் 5
இடைவிடாது தியானம்
பாடல் 5:
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தை தன்
குயிலார் சோலைக் கோலக்காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே
விளக்கம்:
இறைவனின் அழகினை மூன்றாவது பாடலில் பாடிய சம்பந்தர், இங்கே இறைவியின் அழகை நினைத்து மயில் போன்ற சாயல் உடைய மாது என்று கூறுகின்றார். எந்த செயலையும் தொடர்ந்து செய்தலை பயிலுதல் என்று கூறுவார்கள். நாம் நமது வாழ்நாள் முழுவதும் ஏதேனும் கற்றுக் கொண்டே இருப்பதால் தான் கல்வி [பயிலுதல் என்று சொல்கின்றனர். எயில்=கோட்டை; சாய=மடிந்து விழ;
பொழிப்புரை:
மயில் போன்று அழகினை உடைய உமையன்னையைத் தனது உடலின் ஒரு பாகத்தில் வைத்தவனும். வலிமையான மூன்று கோட்டைகளை உடைய திரிபுரத்து அரக்கர்கள் மடிந்து விழும் வண்ணம் அந்த மூன்று கோட்டைகளையும் எரித்த எமது தலைவனும் ஆகிய இறைவன் குயில்கள் நிறைந்து வாழும் சோலைகள் உடைய கோலக்கா தலத்தில் உறைகின்றான். அவனை இடைவிடாது தியானம் செய்து வணங்க, நமது பாவங்கள் முற்றிலும் அழிந்துவிடும்.
Advertisement