முகப்பு
தினம் ஒரு தேவாரம்

95. காரைகள் கூகை முல்லை - பாடல் 2

ஒற்றைப் பிறையுடன்

Updated On : 19 மே, 2018 at 2:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:21 PM

பாடல் 2:

சடையிடை புக்கு ஒடுங்கி உள தங்கு 
           வெள்ளம் வளர் திங்கள்​ கண்ணி அயலே
இடையிடை வைத்தது ஒக்கு மலர் தொத்து 
           மாலை இறைவன் இடம் கொள் பதி தான்
மடையிடை வாளை பாய முகிழ்வாய் நெரிந்து 
           மணம் நாறு நீலம் மலரும்
நடையுடை அன்னம் வைகு புனலம் படப்பை 
           நனிபள்ளி போலும் நமர்காள்

விளக்கம்:

Advertisement

வெள்ளம்=கங்கை; படப்பை=தோட்டம்; பெருமான் தனது சடையினில் ஒற்றைப் பிறையுடன் சரணம் அடைந்த சத்திரனை சூட்டிக் கொண்ட நாள் முதல், சந்திரன் வளரத் தொடங்கியதால் வளர் திங்கள் என்று கூறுகின்றார். முகிழ்=முழுவதும் மலர்ந்து வாய் திறந்தது போன்று காட்சியளிக்கும்; அன்னத்தின் நடையழகு பொதுவாக மகளிரின் அழகு  நடைக்கு உவமையாக சொல்லப்படுவதால் அன்னத்தின் நடையை அழகு என்று குறிப்பிட்டு அழகு நடையுடை அன்னம் என்று இங்கே குறிப்பிடுகின்றார், 

பொழிப்புரை: 

சடையின் இடையே ஒடுங்கி உள்ளே தங்கிய வெள்ளநீர் கங்கை நதியையும், அதன் அருகே  பொருந்தியுள்ள வளரும் பிறைச் சந்திரனையும், கொத்து கொத்தாக பூத்த மலர்கள் கலந்து  இடையிடையே வைத்து தைக்கப்பட்ட மலர் மாலைகளையும், தனது சடையில் கொண்டுள்ள இறைவன் உறையும் பதி தான் நனிபள்ளி தலமாகும். வயல்களுக்கு நீர் பாய்ச்சும் வாய்க்கால்களில் வாளை மீன்கள் துள்ளி குதித்து பாய, அந்த ஓடைகளில் உள்ள கருநீல மலர்கள் தங்களது வாய் முழுவதும் திறந்த நிலையில் மலர, அந்த மலர்கள் வீசும்  நறுமணம் கமழ, அருகில் உள்ள தோட்டத்தில் அழகிய நடை பயிலும் அன்னங்கள் காணப்படும் நீர்நிலைகள் உள்ள தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.