95. காரைகள் கூகை முல்லை - பாடல் 3
வேகமாக மேலே
பாடல் 3:
பெறு மலர் கொண்டு தொண்டர் வழிபாடு
செய்யல் ஒழிபாடு இலாத பெருமான்
கறு மலர் கண்டமாக விடம் உண்ட காளை இடமாய
காதல் நகர் தான்
வெறுமலர் தொட்டு விட்ட விசை போன கொம்பின்
விடுபோது அலர்த்த விரை சூழ்
நறுமலர் அல்லி புல்லி ஒலி வண்டு உறங்கு
நனிபள்ளி போலும் நமர்காள்
விளக்கம்:
Advertisement
பெறுமலர்=தங்களுக்கு கிடைத்த மலர்கள்; ஒழியாது=இடைவிடாது; காளை=தலைவன்; வெறுமலர்=தேன் இல்லாமல் வெறுமையாக இருக்கும் மலர்கள்; கீழே இழுக்கப்பட்டு விடப்பட்ட கிளைகள் வேகமாக மேலெழும்புவதால் ஏற்படும் விளைவினை சம்பந்தர் இங்கே குறிப்பிடுவது, அவர் அருளிய கழுமலம் (சீர்காழியின் பன்னிரண்டு பெயர்களில் ஒன்று) தலத்து பாடல் ஒன்றினை (1.129.7) பாடலை நினைவூட்டுகின்றது. இந்த பாடலில், மலர் பறிப்பதற்காக கீழே இழுக்கபட்ட கிளைகள் விடுபட்டவுடன் வேகமாக மேலே சென்று, அருகிலிருந்து மாமரத்தின் கிளைகளை தாக்க, அந்த கிளைகளிருந்து மாங்காய்கள் கவண் காய்கள் போன்று கீழே சுனையில் விழ, சுனையில் இருந்த பறவைகள் பயந்து கரை சேர்கின்றன என்று சம்பந்தர் கூறுகின்றார். புதைப்ப=சென்று பொருந்த; கொக்கு=மாமரம்; புவி முதல் ஐந்து=நிலம் நீர் காற்று தீ ஆகாயம் ஆகிய ஐந்து பூதங்கள்; புலன் ஐந்து=சுவை, ஒளி, நாற்றம், ஒலி மற்றும் தொடு உணர்வு ஆகிய ஐந்து தன்மாத்திரைகள்; நிலன் ஐந்து= இந்த ஐந்து தன்மாத்திரைகள் அமர்வதற்கு இடமாக உள்ள மெய், வாய், கண், மூக்கு செவி ஆகிய ஐந்து ஞானேந்திரியங்கள்; கரணம் நான்கு=மனம் புத்தி சித்தம் மற்றும் அகங்காரம் ஆகிய நான்கு அந்தக்கரணங்கள்; மேற்கண்ட தத்துவங்களோடு தொடர்பு கொண்டுள்ள ஐந்து கன்மேந்திரியங்களையும் நாம் இங்கே குறிப்பிடுவதாக கருதி பொருள் கொள்ள வேண்டும். இந்த இருபத்து நான்கு
தத்துவங்களாகவும், அவற்றின் பயனாகவும், அவற்றின் உருவமாகவும் உள்ள இறைவன், அருவமாகவும் இருக்கின்றான் என்று இந்த பாடலில் உணர்த்தப் படுகின்றது.
புவி முதல் ஐம்பூதமாய்ப் புலன் ஐந்தாய் நிலன் ஐந்தாய்க்
கரணம் நான்காய்
அவை அவை சேர் பயன் உருவாய் அல்ல உருவாய்
நின்றான் அமரும் கோயில்
தவ முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு புதைப்பக்
கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையில் கரை சேரப் புள்
இரியும் கழுமலமே
பொழிப்புரை:
தங்களுக்கு கிடைத்த மலர்களைக் கொண்டு இடைவிடாது தொண்டர்கள் வழிபாடு செய்ய, அதனை ஏற்றுக்கொண்ட பெருமான், விடத்தை தேக்கியதால், கருங்குவளை மலர் படிந்தது போன்று கழுத்தினில் கருமை நிறம் படைத்தவராக உள்ளார். விடத்தினை உண்டு தனது ஆண்மையை உலகுக்கு உணர்த்திய பெருமான், அனைவர்க்கும் தலைவனாகவும் விளங்குகின்றார். அத்தகைய பெருமான் மிகுந்த விருப்பத்துடன் தனது உறைவிடமாக ஏற்றுக் கொண்டுள்ள இடம் நனிபள்ளி தலமாகும். எண்ணற்ற வண்டுகள் தேன் நுகர்ந்ததால் தேன் இல்லாமல் வேற்று மலர்கள் நிறைந்த கொம்புகள் உடைய மரங்கள், அந்த வண்டுகள் அமர்ந்ததால், வண்டுகளின் பாரம் தாங்காமல் கீழே தாழ்ந்து இருந்தன. வண்டுகள் பறந்து சென்றதும் அந்த கிளைகள் மேலேழுந்து செல்ல, அவ்வாறு மேலெழுந்து செல்வதால் ஏற்படும் அதிர்வினில் அரும்பாக இருந்த பல மலர்கள் மலர்வதால், அவ்வாறு புதியதாக மலர்ந்த பூக்களின் நறுமணம் எங்கும் பரவ, அந்த நறுமணத்தால் கவரப்பட்ட வண்டுகள் வந்து அவ்வாறு மலர்ந்த பூக்களில் பொருந்தி தேன் உண்ட களைப்பில் உறங்கும் இதழ்களைக் கொண்ட மலர்கள் கொண்ட சோலைகள் நிறைந்துள்ள தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.