95. காரைகள் கூகை முல்லை - பாடல் 6
பார்வதி தேவியை
பாடல் 6:
மேகமொடு ஆடு திங்கள் மலரா அணிந்து
மலையான் மடந்தை மணி பொன்
ஆகமொர் பாகமாக அனலாடும் எந்தை
பெருமான் அமர்ந்த நகர் தான்
ஊகமொடு மந்தி உகளும் சிலம்ப அகில்
உந்தி ஒண் பொன் இடறி
நாகமொடு ஆரம் வாரும் புனல் வந்து
அலைக்கும் நனிபள்ளி போலும் நமர்காள்
விளக்கம்:
Advertisement
ஊகம்=கருங்குரங்கு; மந்தி=பெண் குரங்கு; உகளும்=பாயும், குதிக்கும்; நாகம் என்ற சொல் இங்கே நாகத்தின் கழுத்தில் இருக்கும் இரத்தினத்தை குறிக்கின்றது. ஆரம்=முத்து;
பொழிப்புரை:
மேகத்துடன் உறவாடி வானில் உலவும் பிறைச் சந்திரனைத் தனது சடையினில் மலராக அணிந்து கொண்டு, தனது பொன்மேனியில் மலையரசன் இமவானின் மகளாகிய பார்வதி தேவியை ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டு, நெருப்புப் பிழம்பினைத் தனது உள்ளங் கையினில் ஏந்தி நடமாடும் எங்களது பெருமான் அமர்ந்துள்ள நகரம் தான் நனிபள்ளி. பெண் குரங்குகளும் கருங்குரங்குகளும் பாய்ந்து விளையாடும் மலையில் கிடைக்கும் அகில், சந்தனம், பொன், நாக இரத்தினங்கள், முத்து ஆகியவற்றை புரட்டி வாரிக் கொண்டு வந்து கரையில் சேர்க்கும் காவிரி நதி பாயும் தலத்தில் இறைவன் உறைகின்றான். அத்தகைய தலமே நனிபள்ளி என்பதை தொண்டர்கள் நீங்கள் உணர்வீர்களாக.