முகப்பு
தினம் ஒரு தேவாரம்

104. மெய்த்தாறு சுவையும்  - பாடல் 2

காற்றுக்கு இயற்கையில்

Updated On : 2 ஆகஸ்ட், 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:53 PM

பாடல் 2:

    வேரி மிகு குழலியொடு வேடுவனாய் வெங்கானில் விசயன் மேவு
    போரின் மிகு பொறை அளந்து பாசுபதம் புரிந்து அளித்த புராணர் கோயில்
    காரின் மலி கடி பொழில்கள் கனிகள் பல மலரும் உதிர்த்துக் கயம் முயங்கி
    மூரி வளம் கிளர் தென்றல் திரு முன்றில் புகுந்து உலவு முதுகுன்றமே

 
விளக்கம்:

வேரி=தேன், அம்பிகை தனது கூந்தலில் சூடியிருந்த மலர்களில் உள்ள தேன்; கயம்= நீர்நிலை; மூரி=பெருமை; முயங்கி=தடவிக்கொண்டு; காற்றுக்கு இயற்கையில் மணம் இல்லை. ஆனால் முதுகுன்றத்து தலத்தில் வீசும் காற்று, சோலைகளில் உள்ள மலர்களில் படிந்தும் அவைகளை உதிர்த்தும் வருவதாலும், தலத்தின் நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்து வருவதாலும் குளிர்ச்சியும் நறுமணமும் கொண்டதாக விளங்குகின்றது என்று சம்பந்தர் இங்கே கூறுகின்றார். கார்=மழை; அர்ஜுனன் போர் புரியும் ஆற்றலை நேரில் காண அம்பிகை விரும்பியதால், தேவியையும் உடன் அழைத்துக் கொண்டு அர்ஜுனன் தவம் புரிந்த இடத்திற்கு பெருமான் சென்றதாக புராணம் கூறுகின்றது. பொறை=வலிமை  

Advertisement


பொழிப்புரை:

தேன் மிகுந்த புதிய மலர்களை உடையதாய் தேனின் மனம் வீசும் கூந்தலை உடைய உமை அன்னையுடன், வேடுவ வேடம் தாங்கியவனாய், வெம்மை மிகுந்த கொடிய காட்டினில் தவம் செய்து கொண்டிருந்த அர்ஜுனனை அணுகியவர் சிவபெருமான். அவர் அர்ஜுனனின் போரிடும் ஆற்றலை உமையம்மை கண்டு அறிந்து கொள்ளும் பொருட்டு, அவனுடன் போரிட்ட பின்னர் அவனுக்கு பாசுபத அத்திரத்தை அளித்தார். இத்தகைய பெருமான், அனைத்து உயிர்களுக்கும் முன்னே தோன்றிய பெருமான், மழையால் செழித்து வளர்ந்துள்ள நறுமணம் வீசும் சோலைகளில் உள்ள கனிகளை உதிர்த்தும், மலர்களை சிந்தியும், வரும் வழியில் உள்ள நீர்நிலைகளில் உள்ள நீரின் மீது தவழ்ந்தும் வரும் வலிமை மிகுந்த தென்றல் காற்று புகுந்து வீசும் முற்றங்கள் கொண்ட அழகிய வீடுகளை உடைய முதுகுன்றம் எனப்படும் தலத்தில் உறைகின்றார்.        

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.