104. மெய்த்தாறு சுவையும் - பாடல் 4
பிரமன் சாரதியாக
பாடல் 4:
வெம்மை மிகு புர வாணர் மிகை செய்ய விறல்
அழிந்து விண்ணுளோர்கள்
செம்மலரோன் இந்திரன் மால் சென்று இரப்பத்
தேவர்களே தேரதாக
மைம்மருவு மேரு விலும் மாசுணம் நாண் அரி
எரி கால் வாளியாக
மும்மதிலும் நொடி அளவில் பொடி செய்த முதல்வன்
இடம் முதுகுன்றே
விளக்கம்:
Advertisement
மாசுணம்=பாம்பு; வாணர் என்ற சொல் வாழுநர் என்ற சொல்லின் திரிபு. புரவாணர்= விறல்=வலிமை; மைமருவு=மேகங்கள் தவழும் உயர்ந்த மலை;
திரிபுரத்து அரக்கர்களுடன் சிவபெருமான் போருக்குச் சென்றபோது அவருக்கு உதவும் பொருட்டு, பல தேவர்கள் முன்வந்தனர், எட்டு திசைகள் தூண்களாகவும், பூமி தேர்த் தட்டாகவும், ஆகாயம் தேரின் கூரையாகவும், சூரியன் சந்திரன் தேரின் சக்கரங்களாகவும் கொண்ட தேரினை தேவத் தச்சன் விசுவகர்மா உருவாக்கினார். வேதங்கள் குதிரைகளாக நிற்க, பிரமன் சாரதியாக மாறினான். மேருமலை வில்லாகவும், வாசுகி பாம்பு நாணாகவும், திருமால் அம்பின் தண்டாகவும், அக்னி அம்பின் முனையாகவும், வாயு அம்பின் இறக்கைகளாகவும், பங்கு கொள்ள, பல தேவர்கள் மிகுந்த உற்சாகத்துடன் இந்த போரினால் பங்கு கொண்டனர். இவ்வாறு தேவர்களும் மற்றவர்களும் பங்கு கொண்டமை இங்கே தேவர்களே தேரதாக என்ற தொடர் மூலம் குறிப்பிடப் படுகின்றது. இந்த செய்தி பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது.
அந்நாள் வரை திரிபுரத்து அரக்கர்களுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டு இருந்த தேவர்கள், சிவபிரானுக்குத் தாங்கள் உதவுவதைக் குறித்து சற்று கர்வம் கொண்டார்கள் போலும். இதனை உணர்ந்த சிவபிரான், எவருடைய உதவியும் இல்லாமல் தான் ஒருவனாகவே திரிபுரத்து அரக்கர்களை அழிக்கத் திருவுள்ளம் கொண்டார். அவர் தனது திருவடிகளை எடுத்து தேரின் மீது வைத்தவுடன், தேரின் அச்சு முறிந்தது. தேரின் அச்சு முறிந்த தருணத்தில், அங்கே இருந்த திருமால் இடபமாக மாறி பெருமானைத் தாங்கினார் என்றும் புராணம் கூறுகின்றது. இந்த நிகழ்ச்சியும் பல திருமுறைப் பாடல்களில் கூறப் படுகின்றது.
பொழிப்புரை:
கொடுமை மிகுத்து வாழ்ந்து வந்த திரிபுரத்து அரக்கர்கள் அளவு மிஞ்சி அனைத்து உயிர்களுக்கும் தீங்கினைச் செய்ய, தங்களது வலிமை குறைந்து வாழ்ந்து வந்த தேவர்களும் தாமரை மேல் அமரும் பிரமனும் திருமாலும் இந்திரனும் பெருமானிடம் சென்று தங்களை காப்பாற்றுமாறு வேண்டிய போது அவர்களுக்கு இரங்கிய பெருமான் திரிபுரத்து அரக்கர்களுடன் போரிடச் சென்றார். அப்போது பல தேவர்கள், பெருமான் ஏறிச் சென்ற தேரின் பல பாகங்களாக பங்கேற்றனர். மேகங்கள் தவழும் வண்ணம் உயர்ந்து நின்ற மேரு மலையினைத் தனது வில்லாக வளைத்துக் கொண்ட பெருமான் வாசுகி பாம்பினை அந்த வில்லின் நாணாக ஏற்றி, திருமால் தீக்கடவுள் மற்றும் காற்றுக் கடவுள் மூவரும் பங்கு கொண்ட அம்பினை அந்த வில்லினில் பூட்டி, நொடிப் பொழுதினில் மூன்று கோட்டைகளும் தீப்பற்றச் செய்து சாம்பல் பொடியாக மாறுமாறு அழித்தார். இத்தகைய ஆற்றல் கொண்ட பெருமான் உறையும் இடம் முதுகுன்றமாகும்.