106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 3
பொன்னும் மணியும்
பாடல் 3:
பிணி கலந்த புன்சடை மேல் பிறையணி சிவன் எனப் பேணிப்
பணி கலந்து செய்யாத பாவிகள் தொழச் செல்வது அன்றால்
மணி கலந்து பொன் உந்தி வரு புனல் நிவா மல்கு கரை மேல்
அணி கலந்த நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
பிணி=பிணைப்பு; கலந்து=மனம் மொழி மெய் ஆகிய மூன்றையும் ஈடுபடுத்தி; பிணைப்புத் தன்மை தான் அடர்ந்த தன்மையை சடைக்கு கொடுக்கும் என்பதை உணர்த்த பெருமானின் அடர்ந்த சடையினை பிணி கலந்த புன்சடை என்று சம்பந்தர் இங்கே குறிப்பிடுகின்றார்.
பொழிப்புரை:
பிணைப்புத் தன்மை கொண்டு அடர்ந்து காணப்படும் செம்பட்டை சடையின் மேல் பிறைச் சந்திரனை அணிந்துள்ள பெருமானே, சிவனே என்று போற்றி, தங்களது மனம் மொழி மெய் ஆகிய மூன்றினையும் ஈடுபடுத்தி அவனுக்கு திருப்பணிகள் செய்யாத பாவிகளுக்கு அவனது அருள் கிட்டாது. பொன்னும் மணியும் கலந்து அடித்துக் கொண்டு வரப்படும் நிவா நதியின் கரை மேல் அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானைப் போற்றி வழிபட்டு, உமது மனம் மொழி மற்றும் மெய் ஆகிய மூன்றையும் ஈடுபடுத்தி பெருமானுக்கு திருத்தொண்டுகள் புரிவீர்களாக.