106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 5
திருவருள் வேண்டும்
பாடல் 5:
வெருகு உரிஞ்சு வெங்காட்டில் ஆடிய விமலன் என்று உள்கி
உருகி நைபவர்க்கு அல்லால் ஒன்றும் கைகூடுவது அன்றால்
முருகு உரிஞ்சு பூஞ்சோலை மொய்ம்மலர் சுமந்து இழி நிவா வந்து
அருகு உரிஞ்சு நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
வெருகு=காட்டுப் பூனை; மரநாய் என்றும் கூறுவார்கள்; உரிஞ்சு=தேய்க்கின்ற; தேய்த்தல் என்ற பொருளில் வரும் இந்த சொல் இங்கே நிறைதல் நெருங்குதல் பொருந்துதல் என்ற பொருளில் வரும் வண்ணம் கையாளப்பட்டுள்ளது. முருகு=அழகு மொய்ம்மலர்=வண்டுகள் இடைவிடாது மொய்க்கும் வண்ணம் தேன் அதிகமாக பொருந்தியுள்ள மலர்கள்;
பொழிப்புரை:
காட்டுப் பூனைகள் திரியும் கொடிய சுடுகாட்டினில் நடமாடும் விமலன் என்று பெருமானின் திறனை மனதினில் நினைத்து உருகி உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு அவனது அருள் கைகூடுவதில்லை. அழகு பொருந்தியதும் இடைவிடாது வண்டுகள் மொய்க்கும் வண்ணம் மிகவும் அதிகமான தேன் பொருந்தி உள்ளதும் ஆகிய மலர்களைச் சுமந்து கொண்டு வந்து சேர்க்கும் நீரினை உடைய நிவா நதிக்கரையினில் அமைந்துள்ள நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானின் திறனை மனதினில் எண்ணி உள்ளம் உருகு நைந்து அவரை வழிபடுவீர்களாக.