106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 6
பரந்த கங்கை
பாடல் 6:
உரவு நீர்சடைக் கரந்த ஒருவன் என்று உள் குளிர்ந்து ஏத்த
பரவி நைபவர்க்கு அல்லால் பரிந்து கை கூடுவது அன்றால்
குரவ நீடுயர் சோலைக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அரவம் ஆகும் நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
அரவம்=ஓசை; உரவு நீர்=பரந்த கங்கை நதி; அரவம் என்பதற்கு பாம்பு என்று பொருள் கொண்டு தண்ணீர் பாம்புகள் நிறைந்த நிவா நதி என்றும் சிலர் பொருள் கூறுகின்றனர்.
பொழிப்புரை:
பரந்த கங்கை நதியினைத் தனது சடையினில் மறைத்து வைத்த ஒப்பற்ற திறமை உடையவன் என்று உள்ளம் குளிர்ந்து பெருமானை வணங்கி வாழ்த்தாத மனிதர்களை பெருமானின் திருவருள் சென்று அடையாது. நெடிது உயர்ந்த குரா மரங்கள் நிறைந்த சோலைகளில் ஒடும் குளிர்ந்த நீரினை உடைய நிவா நதிக் கரையின் மீது அமைந்துள்ள சந்தடி மிகுந்து ஓசை எழும் நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், நீங்கள் பெருமானின் வல்லமைகளை புரிந்து கொண்டு அவரை வணங்கி போற்றி நைவடையும் உள்ளம் கொண்டு அவரை வழிபடுவீர்களாக.