106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 7
சிவன் என்னும் திருநாமம்
பாடல் 7:
நீல மாமணி மிடற்று நீறணி சிவன் எனப் பேணும்
சீல மாந்தர்கட்கு அல்லால் சென்று கைகூடுவது அன்றால்
கோல மாமலர் உந்திக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
ஆலும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
பேணும்=போற்றும்; சீலம்=நல்லொழுக்கம்; சிவபெருமானை போற்றி வணங்குவதே நல்ல ஒழுக்கம் என்று இங்கே கூறப் படுகின்றது. ஆலுதல்=உரத்த குரல் எழுப்புதல்;
பொழிப்புரை:
நீல மாமணி பதித்தது போன்ற கழுத்தினை உடையவனும், திருநீறு அணிந்தவனும், சிவன் என்னும் திருநாமம் உடையவனும் ஆகிய பெருமானைப் போற்றி வாழும் நல்லொழுக்கம் இல்லாத மாந்தர்களை பெருமானின் திருவருள் சென்று கைகூடாது. அழகிய சிறந்த மலர்களை தள்ளிக் கொண்டு வரும் குளிர்ந்த நீர்ப் பெருக்கினை உடைய நிவா நதிக் கரையினில் அமைந்துள்ளதும் ஆரவாரங்கள் மிகுந்த சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், அவரது பெருமைகளை உணர்த்தும் பல திருநாமங்களை சொல்லிப் புகழ்ந்து வணங்கும் நல்லொழுக்கம் உடைய மனிதர்களாக மாறுவீர்களாக.