106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 8
கயிலாய மலையினை
பாடல் 8:
செழுந்தண் மால் வரை எடுத்த செரு வலி இராவணன் அலற
அழுந்த ஊன்றிய விரலான் போற்றி என்பார்க்கு அல்லது அருளான்
கொழுங்கனி சுமந்து உந்திக் குளிர் புனல் நிவா மல்கு கரை மேல்
அழுந்தும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
அழுந்தும்=வேரூன்றி செழிக்கும்; கொழுங்கனி=நன்கு கனிந்த கனிகள்
பொழிப்புரை:
செழிப்புடன் விளங்குவதும் குளிர்ச்சி பொருந்தியதும் ஆகிய கயிலாய மலையினை பேர்த்து எடுக்க முயற்சி செய்த போர் வலி மிக்க அரக்கன் இராவணன் மலையின் கீழே அழுந்தி நலிவடைந்து கதறும் வண்ணம், தனது கால் பெருவிரலை மலையின் மீது அழுத்திய பெருமான் என்று சிவபிரானது வலிமையை புகழ்ந்து போற்றாத மனிதர்களை பெருமானின் திருவருள் சென்று சேராது. நன்கு கனிந்த கனிகளைச் சுமந்து வரும் குளிர்ந்த நீரினைக் கொண்ட நிவா நதிக்கரையில் அமைந்துள்ளதும் வேரூன்றி செழித்த மரம் செடி கொடிகளை உடைய சோலைகள் நிறைந்ததும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் திருவருள் வேண்டும் என்று விரும்புவீராயின், பெருமானின் வல்லமையை புகழ்ந்து போற்றி அவனை வணங்கி அவனது அருளினைப் பெறுவீர்களாக.