106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 9
சிவபெருமானை வணங்கி
பாடல் 9:
நுணங்கு நூல் அயன் மாலும் இருவரும் நோக்க அரியானை
வணங்கி நைபவர்க்கு அல்லால் வந்து கைகூடுவது அன்றால்
மணம் கமழ்ந்து பொன் உந்தி வருபுனல் நிவா மல்கு கரை மேல்
அணங்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
நுணங்கு நூல்=நுண்ணிய பொருட்களை உணர்த்தும் நூல்கள்; அணங்கும்=அழகு உடைய;
பொழிப்புரை:
நுண்ணிய பொருட்களை விளக்கும் நுட்பமான வேத நூல்களை அறிந்து உணர்ந்துள்ள பிரமன் மற்றும் திருமால் ஆகிய இருவரும் முடியையும் அடியையும் காணா வண்ணம் நீண்ட தழற்பிழம்பாய் நெடிதுயர்ந்த சிவபெருமானை வணங்கி உள்ளம் நைந்து வழிபடாத மனிதர்களுக்கு இறைவனின் திருவருள் கைகூடுவதில்லை. பல வகை நறுமணம் கலந்து கமழ்வதும் பொன் போன்ற அரிய பொருட்களை அடித்துக் கொண்டு வரும் நீர்ப்பெருக்கினை உடையதும் ஆகிய நிவா நதிக்கரையின் மேல் அமைந்துள்ளதும் அழகிய சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானை வணங்கி வழிபட வேண்டும் என்பதை உணர்வீர்களாக..