106. எந்தை ஈசன் எம்பெருமான்- பாடல் 10
மலர்களின் நறுமணம்
பாடல் 10:
சாக்கியப் படுவாரும் சமண் படுவார்களும் மற்றும்
பாக்கியப் படகில்லாப் பாவிகள் தொழச் செல்வது அன்றால்
பூக்கமழ்ந்து பொன் உந்திப் பொருபுனல் நிவா மல்கு கரை மேல்
ஆர்க்கும் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள் தம் அருளே
விளக்கம்:
Advertisement
படுவார்=விழுபவர்கள்; சாக்கிய=பௌத்த;
பொழிப்புரை:
சாக்கிய மதம் என்று அழைக்கப்படும் புத்த மதத்தில் விழுவோர்களும் சமண சமயத்தில் விழுவோர்களும், ஏனைய புறப்புறச் சமயங்களில் வீழ்ந்தவர்களும் பெருமானைத் தொழாத காரணத்தால், அவனது திருவருளினைப் பெறுகின்ற பாக்கியம் இல்லாதவர்களாக உள்ளனர். மலர்களின் நறுமணம் உடைத்து, பொன்னை அடித்துக் கொண்டு வரும் அதிகமான நீர்ப் பெருக்கினை உடைய நிவா நதிக்கரையினில் அமைந்துள்ளதும், ஆரவாரங்கள் நிறைந்த சோலைகள் உடையதும் ஆகிய நெல்வாயில் அரத்துறை தலத்தில் வீற்றிருக்கும் அடிகளின் திருவருள் வேண்டும் என்று நீங்கள் விரும்புவீராயின், பெருமானைத் தொழுவீர்களாக.