முகப்பு
தினம் ஒரு தேவாரம்

101. நின்று மலர் தூவி  - பாடல் 5

இறைவன் செயல்

Updated On : 11 ஜனவரி, 2019 at 11:29 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM


பாடல் 5:

    மணியார் முதுகுன்றைப்
    பணிவார் அவர் கண்டீர்
    பிணி ஆயின கெட்டுத்
    தணிவார் உலகிலே

விளக்கம்:

Advertisement

தணிவார்=தாழ்வு என்ற தன்மை; தணிவார் என்ற சொல்லுக்கு தாழ்வு எனும் தன்மை அடைந்து ஆணவமலத்தின் வலிமை அடங்கும் நிலை என்று சிவக்கவிமணி அவர்கள் விளக்கம் கூறுகின்றார். மிகவும் பொருத்தமானதும் அழகானதும் ஆகிய விளக்கம். பழைய வினைகளை நீக்கிக் கொள்ளும் உயிர், தன்னை வினைகள் இனிமேல் சாராத வண்ணம் செயல்பட வேண்டும் அல்லவா. அதற்கு அடக்கம் மிகவும் அவசியம். யான் எனது என்ற உணர்வுகள் தாமே, நம்மை செருக்கு கொள்ளச் செய்து வினைகள் பெருகுவதற்கு அடி கோலுகின்றன. யான் எனது என்ற அந்த உணர்வுகளையே இங்கே பிணி என்று சம்பந்தர் குறிப்பிடுகின்றார். அந்த உணர்வுகள் நீங்கி, நடப்பது அனைத்தும் இறைவன் செயல் என்ற பக்குவத்துடன் வாழ்க்கையை எதிர்கொண்டால், ஆணவ மலம் அடங்கி நிற்கும். இறைவன் மற்றும் உயிர்கள் போன்று ஆணவ மலமும் அநாதி என்றும் அழியாது நிற்கும் என்பதால், ஆணவ மலத்தை நம்மால் ஒழிக்க முடியாது, அடக்கத் தான் முடியும் என்று செய்தியும் இங்கே வழங்கப் படுகின்றது. இவ்வாறு தற்போதும் நீங்கி சிவபோதத்தினை வளர்த்துக் கொண்டு வாழும் வாழ்க்கை, வீடுபேறு அடைவதற்கு அடுத்த படியாகும். அத்தகைய அடியார்களைக் கண்டு, அவர்களை முன்மாதிரியாக ஏற்று நமது வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற அறிவுரை இங்கே வழங்கப் படுகின்றது. மணி=அழகு;      
 
பொழிப்புரை:

மணி போன்று அழகிய முதுகுன்றத்துப் பெருமானை பணிந்து வாழும் அடியார்கள், யான் எனது என்ற தங்களது பிணிகள் தீர்க்கப் பெற்று பற்றற்றவர்களாக அடக்கத்துடன் உலகில் வாழ்வதை, உலகத்தவரே நீங்கள் காண்பீர்களாக. அத்தகைய அடியார்களைக் காணும் நீங்கள் அவர்களை பின்பற்றி வாழத் தொடங்குவீராக.   

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.