101. நின்று மலர் தூவி - பாடல் 8
இறைவனைத் தொழுவதால்
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:38 PM
பாடல் 8:
பத்துத் தலையோனை
கத்த விரல் ஊன்றும்
அத்தன் முதுகுன்றை
மொய்த்து பணிமினே
விளக்கம்:
மொய்த்து=நெருங்கி; இந்த பாடல் நமக்கு கூறும் அறிவுரையாக அமைந்துள்ளது, மேலே குறிப்பிடப்பட்ட ஏழு பாடல்களில், இறைவனைத் தொழுவதால் நாம் அடையவிருக்கும் பல பலன்களை கூறிய சம்பந்தர், இந்நாள் வரை இறைவனை பணியாது இருக்கும் மாந்தர்களை, இறைவனை நெருங்கிச் சென்று பணியுமாறு அறிவுரை கூறுகின்றார்.
Advertisement
பொழிப்புரை:
பத்து தலைகள் உடைய அரக்கனாகிய இராவணனை, அவன் கதறி அழும் வண்ணம் கயிலை மலையின் கீழே அடர்த்து தனது கால் விரலை ஊன்றிய நமது தலைவனாகிய இறைவனை, முதுகுன்றத்து மறையவனை, உலகத்தவரே நீங்கள் நெருங்கிச் சென்று பணிவீர்களாக.