முகப்பு
தினம் ஒரு தேவாரம்

103. தேவா சிறியோம் பிழையை  - பாடல் 4

பெருமானை வழிபடுகின்றார்

Updated On : 25 ஜூலை, 2018 at 12:00 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:45 PM

பாடல் 4:

    தெரிந்த அடியார் சிவனே என்று திசை தோறும்
    குருந்தம் மலரும் குரவின் அலரும் கொண்டு ஏந்தி
    இருந்து நின்று இரவும் பகலும் ஏத்தும் சீர்
    முரிந்து மேகம் தவழும் சோலை முதுகுன்றே

 
விளக்கம்:

தெரிந்த=சிவபெருமான் ஒருவனே வழிபாட்டுக்கு உரியவனாகவும், வீடுபேறு அளிக்கும் வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான் என்பதை அறிந்த அடியார்கள்; முரிந்து= வளைந்து; முனிவர்கள் அந்தணர்கள் மற்றும் எப்போதும் பெருமானது பண்பினை ஆராயும் அடியார்கள் பெருமானை வழிபடுகின்றார் என்று முந்தைய மூன்று பாடல்களில் உணர்த்திய சம்பந்தர், இந்த பாடலில் அவனது பண்பினை குணங்களை அறிந்த அடியார்கள் பெருமானை வழிபடுவதை குறிப்பிடுகின்றார். பிரமன் திருமால் உட்பட அனைத்து தேவர்களும் பிறப்பிறப்புச் சுழற்சியில் சிக்கியவர்களாக இருப்பதால், தாங்கள் அடைய முடியாத வீடுபேற்றினை அவர்களால் எவ்வாறு மற்றவர்களுக்கு அளிக்க இயலும். எனவே பிறப்பிறப்பினைக் கடந்த பெருமான் ஒருவனே வீடுபேற்றினை அளிக்க முடியும் என்பதை உணர்ந்து தெரிந்து கொண்ட அடியார்கள் பெருமானை வழிபடுவது இங்கே குறிப்பிடப் படுகின்றது. அனைத்து திசைகளிலும் நின்றவாறு அடியார்கள் உள்ளனர் என்று குறிப்பிடுவதன் மூலம், மிகவும் அதிகமான அடியார்கள் இந்த தலம் வந்தடைந்து இறைவனை வழிபடுகின்றனர் என்று சம்பந்தர் நமக்கு உணர்த்துகின்றார்.    

Advertisement

பொழிப்புரை:

பெருமான் ஒருவனே வீடுபேற்றினை அளிக்கும் வல்லமை வாய்ந்தவன் என்பதை தெரிந்து கொண்ட அடியார்கள் சிவனே சிவனே அனைத்து திசைகளிலும் நின்றவாறு குருந்த மலரையும் குரவ மலரையும் பெருமானின் திருவடிகளில் தூவி பெருமானை, இரவும் பகலும் புகழ்ந்து அடியார்கள் பாடும் சிறப்பினை உடைய முதுகுன்றத்து உயர்ந்த கோயில். வானில் நிலவும் மேகங்கள் தாழ்ந்து வளைந்து முதுகுன்றத்து கோயில் மீது தோய்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.