103. தேவா சிறியோம் பிழையை - பாடல் 9
மலர்கள் சிரிக்கும்
பாடல் 9:
அல்லி மலர் மேல் அயனும் அரவின் அணையானும்
சொல்லிப் பரவித் தொடர ஒண்ணாச் சோதி ஊர்
கொல்லை வேடர் கூடி நின்று கும்பிட
முல்லை அயலே முறுவல் செய்யும் முதுகுன்றே
விளக்கம்:
Advertisement
கொல்லை=முல்லை நிலம்; முல்லை நிலத்தில் முல்லை பூக்கள் மலர்வது சம்பந்தர்க்கு மலர்கள் சிரிப்பது போன்று தோன்றியது போலும். மலர்கள் சிரிக்கும் காரணத்தை அறிய சம்பந்தர் தலைப்படுகின்றார். வேடர்கள் வணங்கும் எளியவனாக இருக்கும் பெருமானின் பெருமைகளை உணராமல் அவனைத் தொழாமல் நின்ற அயன் மற்றும் திருமாலின் நிலையினை எண்ணி, முல்லை பூக்கள சிரித்தன என்று கற்பனை செய்கின்றார். அல்லி= தாமரை மலர்
பொழிப்புரை:
தாமரை மலரின் மேல் உறையும் பிரமனும் பாம்பினைத் தனது படுக்கை மற்றும் தலையணையாகக் கொண்டுள்ள திருமாலும் பெருமானைப் புகழ்ந்து பணிந்து வணங்காமையால், பெருமானின் அடியையும் முடியையும் கண்டறியும் பயணத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு தங்களின் முயற்சியில் அவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. எனவே தான், தங்கள் முன்னே நெடிய சோதியாக நின்ற இறைவனைக் கண்டு ஏதும் செய்வதறியாது அவர்கள் இருவரும் திகைத்தனர். ஆனால் முல்லை நிலத்து வேடர்கள் ஒன்று கூடி நின்று தயக்கம் ஏதுமின்றி பெருமானைத் தொழுகின்றனர். பிரமனும் திருமாலும் செய்யாத செயலை, பெருமானைத் தொழுது வணங்கும் செயலினை பணிவுடன் செய்து முடிக்கும் வேடர்களின் தன்மையையும் திருமால் மற்றும் பிரமன் ஆகியோரின் பரிதாப நிலையையும் நினைத்துப் பார்த்து, ஏளனமாக சிரிக்கும் வண்ணம் முல்லை மலைகளின் மலர்ந்த நிலை அமைந்துள்ள தலம் முதுகுன்றமாகும்.